மாட்டிறைச்சி உண்டதால் தான் ஜமாய்காவின் உசேன் போல்டால் 9 தங்க பதக்கங்களை ஒலிம்பிக் போட்டியில் வெல்ல முடிந்தது என பா.ஜ.கவின் எம்.பி உதித் ராஜ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலித் சமூக ஆர்வளரும் பா.ஜ.கவின் எம்.பியுமான உதித் ராஜ் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் உசேன் போல்டின் பயிற்சியாளர் அவரை மாட்டிறைச்சி சாப்பிடுமாறு ஆலோசனை கூறியதாகும், இதனால் தான் உசேன் போல்ட் ஒலிம்பிக் போட்டியில் 9 தங்க பதக்கங்களை வெல்ல முடிந்தது என தெரிவித்திருந்தார்.
பா.ஜ.கவின் எம்.பியே இவ்வாறான கருத்துக்களை பதிவு செய்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சி.என்.என் தொலைக்காட்சி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது " நான் அவ்வாறு டுவிட்டரில் கூறியது உண்மைதான். காரணம் தடகள வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி மேற்கொள்வதற்கு முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் கூறிவருகின்றனர். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது என்பது வசதிகளை அடிப்படையாக வைத்து அல்ல, மாறாக அது அர்பணிப்பு சம்பந்தப்பட்டது. உசேன் போல்ட் எழையாக இருந்தார் அவருக்கென்று எந்த வசதியும் இல்லை ஆனால் அவரிடம் அர்பணிப்பு இருந்தது. அவரது பயிற்சியாளர் புரத சத்துக்கள் கிடைப்பதற்காக மாட்டிறைச்சி சாப்பிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதனாலேயே உசேன் போல்ட்டால் 9 தங்க பதக்கங்களை வெல்ல முடிந்தது" என தெரிவித்தார்.
மாட்டிறைச்சி உண்பதற்கு நாடு முழுவதும் தடைவிதிக்க வேண்டுமென பா.ஜ.க கூறி வரும் நிலையில் நீங்கள் இவ்வாறு கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே! என பத்திரிகையாளர் கேட்டதற்கு "எங்கள் கட்சியின் சார்பில் நீங்கள் விரும்பியதை உண்ணுங்கள் என்றோ, நீங்கள் எதையும் உண்ணக்கூடாது என்றோ சொல்லவில்லை. இவ்விவகாரத்தின் மூலமாக பா.ஜ.கவிற்கு அவப்பெயரை ஏற்படுத்த சில முயற்சி செய்து வருகின்றனர். நான் கூறியது எந்த பா.ஜ.க தலைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தவில்லை. இதில் சர்ச்சை ஏற்படுவதற்கு ஒன்றும் இல்லை" என கூறினார்.
அப்படியானால் தடகள் வீரர்களுக்கு மட்டும் மாட்டிறைச்சி உண்பதற்கு அனுமதிக்கப்படுவார்களா? என கேட்டதற்கு, தடகள வீரர்கள் மாட்டிறைச்சி உண்பதற்கு இந்தியாவில் எந்த தடையும் விதிக்க கூடாது. வீரர்கள் மாட்டிறைச்சி உண்பதற்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்க கூடாது. நமக்கு தங்க பதக்கங்கள் வேண்டும். பா.ஜ.க ஒருபோதும் இதனை எதிர்க்காது" என தெரிவித்தார்.
பா.ஜ.க எம்.பியின் இந்த கருத்து மாட்டிறைச்சி விவகாரத்தில் பா.ஜ.கவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் குஜராத் மாநிலம் உனாவில் பசு காவலர்களால் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்தவர் இந்த உதித் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments