வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு என்ற கருத்துக் கணிப்பில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியை குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் நெருங்குகிறார் என்று தெரிய வந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த "தி எகானமிஸ்ட்' வார இதழும் யூ-கவ் ஆன்லைன் ஊடகமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்காளர்கள் இடையே 47 சதவீத ஆதரவு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
அதே சமயத்தில், குடியரசுக் கட்சி வேட்பாளராக அதிபர் தேர்தலில் களமிறங்கியிருக்கும் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 44 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
பல்வேறு கருத்துக் கணிப்புகளில் இருவருக்கும் உள்ள ஆதரவு விகிதத்தில் வித்தியாசம் இருந்தாலும், 172 ஆண்டுப் பாரம்பரியம் மிக்க "தி எகானமிஸ்ட்' வாரப் பத்திரிகையின் கருத்துக் கணிப்பில் ஹிலாரி - டிரம்ப் இடையே வெறும் 4 சதவீதம் மட்டுமே ஆதரவில் வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது.
இதுவரை பல்வேறு அமைப்புகள், ஊடக நிறுவனங்கள் அதிபர் தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளன. அவற்றில் ஹிலாரி கிளிண்டன் சராசரியாக டிரம்ப்பை விட 5 சதவீதம் வரை கூடுதல் ஆதரவு பெற்றிருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் பாரம்பரியம் மிக்க "தி எகானமிஸ்ட்' வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பு வெளியாகியிருக்கிறது.
வரும் வாரங்களில் ஹிலாரி முன்னிலை வகிப்பதை டிரம்ப் மேலும் குறைத்து ஹிலாரியை நெருங்கிவிடுவார் என்று குடியரசுக் கட்சியின் தேசிய தலைவர் ரீன்ஸ் பிரீபஸ் கூறினார். இ-மெயில் தகவல் அழிப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கியுள்ள ஹிலாரி அடுத்த சில வாரங்களில் பின்னுக்குத் தள்ளப்படுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:
Write comments