அகமதாபாத்தில் பிரபல பீங்கான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் குழந்தை தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை கடுமையாக வேலை வாங்கி வருவதாகவும் தனக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இதனை உறுதி செய்வதற்காக 22 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஜர்னா ஜோஷி அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பத்தை ஏற்று அந்த நிறுவனம் ஜோஷிக்கு வேலை வழங்கியது. இதனை நன்கு பயன்படுத்திக்கொண்டு அங்கு பணியாற்றும் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக கண்காணித்துள்ளார்.
அந்த நிறுவனத்தில் 111 குழந்தை தொழிலாளர்கள் கடினமான வேலைகளுக்கு ஆட்படுத்தப்படுவதை கண்டுபிடித்த ஜோஷி அந்த நிறுவனத்தில் மனித வளத்துறையை முறையிட்டும் அவருக்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையில், அக்குழந்தைகளை காப்பாற்ற முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இப்பிரச்சனை தொடர்பாக விரைவில் உறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயலகத்திலிருந்து ஜோஷிக்கு பதிலும் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர், வேலைவாய்புத்துறை அதிகாரிகள் என பலரும் அடங்கிய சோதனை குழு அன்ட நிறுவனத்தில் சோதனை நடத்தி அங்கு பணியாற்றிய 111 குழந்தைகளையும் மீட்டு கொண்டுவந்தது.
இச்சம்பவம் நடைபெற்று அடுத்த நாள் வீதியில் ஜோஷி சென்று கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று ஜோஷியை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குஜராத்தில் இது போன்ற எண்ணற்ற நிறுவனங்களில் ரகசியமாக குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் ஏன்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

No comments:
Write comments