‘அரசு தடைவிதித்த போதிலும் நாங்கள் ஒட்டகங்களை பக்ரீத் அன்று பலி கொடுப்போம்’ என்று உறுதியாகக் கூறுகிறார்கள் இஸ்லாமியர்கள்.
செப்டம்பர் 13ஆம் தேதி இஸ்லாமியர்களின் ஈகை திருநாளான பக்ரீத் திருநாளை கொண்டாட, தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் ஒட்டகத்துக்கும், ஆடுகளுக்கும் ஏற்கெனவே முன்பணம் கொடுத்து விட்டார்கள்.
பல இடங்களில் ஆடுகளை வாங்கி வந்து வீடுகளில் கட்டி வைத்து புல், செடி, கொடிகளைப் போட்டு வளர்த்து வருகிறார்கள். குர்பானி கொடுக்க ஒட்டகங்களும் வந்துவிட்டன. இந்த நிலையில்தான், சென்னை உயர்நீதிமன்றம் ஒட்டகம் வெட்ட தடைவிதித்துள்ளது. வாங்கிய ஒட்டகத்தை இஸ்லாமியர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று தெரிந்துக்கொள்ள, இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா.ஜெ. அப்துல் ரஹிம் அவர்களை தொடர்புகொண்டு கேட்டோம். “ஒட்டகம் வெட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது அல்ல. ஆந்திரா மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு 100 ஒட்டகங்கள் வந்து விட்டன. நானே இரண்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுக்க வாங்கியிருக்கிறேன். சென்னை காவல்துறை அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு கேட்டார்கள். நான் உண்மையைச் சொன்னேன். ‘இரண்டு ஒட்டகங்களை வெட்டப் போகிறேன். நீங்கள் வழக்கு போடுங்கள். கைது செய்யுங்கள்’ என்று சொல்லி விட்டேன். பக்ரீத் அன்று 100 ஒட்டகங்கள் வெட்டப்படும். குர்பானி கொடுக்கப்படும். ஒட்டகம் வெட்டுபவர்களையும் உண்பவர்களையும் கைது செய்யட்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் சிறையை நிரப்புவோம்” என்றார் ஆதங்கத்துடன்.
No comments:
Write comments