Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 9, 2016

காவிரி: கர்நாடகா கோபம் - தமிழக விவசாயிகள் ஏமாற்றம்!

 

தமிழகத்துக்கு காவிரி நீர் ஒருவழியாக வந்து சேர்ந்தது. இதனால் மகிழ்ச்சியடைய வேண்டிய தமிழக டெல்டா விவசாயிகள் திருப்தியில்லாத மனநிலையில்தான் இருக்கிறார்கள். காரணம், காலம் கடந்து வந்த இந்த காவிரி நீர், சம்பா சாகுபடிக்கு எவ்வாறு பயன்படும் என்ற கேள்விதான். மேலும், சுமார் 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு 60 டி.எம்.சி. தண்ணீர் உடனடியாக தேவைப்படுகிறது. ஆனால், வெறும் பத்து நாட்களுக்கு 15,000 கன அடி நீர் எந்த மூலைக்கு என்ற ஆதங்கமும் ஏமாற்றமும் டெல்டா விவசாயிகளிடம் பொதுவாகக் காணப்படுகிறது. தண்ணீர் கிடைத்தும் தமிழக டெல்டா விவசாயிகள் திருப்தியில்லாமல் இருக்க, கர்நாடக மக்களோ தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொந்தளித்து போராட்டத்துக்கு ஆயத்தமாகி விட்டார்கள்.

தமிழகத்துக்கு விநாடிக்கு 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் (12.96 டி.எம்.சி.) திறந்து விடுமாறு உச்சநீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் பேருந்துகள் ஓசூரோடு நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதற்கிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று, கடந்த செவ்வாய் இரவு 12.05 மணிக்கு கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. அதாவது கூடுதலாக ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட நீர் வியாழன் அன்று காலை பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இரவுக்குள் நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.

இந்நிலையில், கூடுதல் தண்ணீர் கேட்டு தமிழகம் காவிரி கண்காணிப்பு குழுவில் மூன்று நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த அவகாசம் புதன் கிழமை முடிவடைந்த நிலையில், புதன் கிழமை இரவு தமிழக அரசு காவிரி கண்காணிப்பு குழுவிடம் இ-மெயில் மூலம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், ‘செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 134 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடகா, சுமார் 13 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. மேட்டூர் அணையில் தற்போது இருப்பில் உள்ள நீரும், கர்நாடகம் திறந்து விட்டுள்ள நீரும் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது. சுமார் 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு 60 டி.எம்.சி., தண்ணீர் உடனடியாக தேவைப்படுகிறது. எனவே, உடனடியாக காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்டி விவசாயத்துக்குத் தேவையான 60 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளது.

இந்நிலையில், கர்நாடகா சார்பில் காவிரி கண்காணிப்பு குழு தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. 13 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம். அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. தமிழகத்துக்குத் தொடர்ந்து திறந்து விட முடியாது. உத்தரவு பிறப்பிக்கும் முன்னர் இரு மாநிலங்களிலும் ஆய்வு நடத்த குழு அனுப்ப வேண்டும். அப்போது கா்நாடகாவில் அணைகளில் உள்ள தண்ணீரின் அளவு, விவசாயப் பணி, குடிநீரின் தேவை குறித்து தெரியவரும்” என்று கூறினார்.

தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்துவிடப்பட்டதை எதிர்த்து கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் முழு அடைப்பு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மக்கள் அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வர வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். கர்நாடகத்தில் இந்த பந்த் முழு அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், பயம், அச்சம் காரணமாகவே பாதிப் பேர் கடை, வர்த்தக நிறுவனங்களை மூடி விடுவார்கள். தனியார் பள்ளிகள் முழுமையாக இயங்காது. பொதுப் போக்குவரத்தும் அடியோடு பாதிக்கப்படும் என்றே தெரிகிறது. ஏற்கனவே கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் டிவி சேனல்கள் தெரியவில்லை. தியேட்டர்களிலும் தமிழ்ப் படங்களைத் தூக்கி விட்டனர். நாளை தியேட்டர்களும் மூடப்படுகின்றன. ஒரு திரைப்படமும் ஓடாது என்று திரைப்பட அமைப்புகள் அறிவித்துள்ளன. புதிய கன்னடப் படங்களை வெளியிடுவதையும் சனிக்கிழமைக்குத் தள்ளி வைத்துள்ளனர். பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம், அதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஓசூர் சாலையிலும் இன்று ஒரு வாகனமும் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடாது என்று ஏற்கனவே அறிவித்து விட்டனர்.

தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை கொடுத்து விட்டனர். அதே சமயம், அரசுப் பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்குமா அல்லது விடுமுறையா என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. பந்த்துக்கு அரசு ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. எனவே, கர்நாடக அரசு பந்த்தை ஆதரிக்க முடியாது. இருப்பினும் மறைமுகமாக பந்த்துக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு ஆதரவு தருவதாக கூறப்படுகிறது. எனவே, இன்று அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வராவிட்டாலும்கூட அரசு கண்டு கொள்ளாது என்றே கருதப்படுகிறது. பந்த் முழு அளவில் இருக்கும் என்றாலும் கூட வழக்கம் போல வட கர்நாடகாவில் பந்த் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டனா, ராம்நகர், சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் போலீஸ் குவிப்பு பெங்களூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு விதான சவுதா முன்பு அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் கர்நாடக காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic