அரியானாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்ழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
அரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தில் ஏழை சிறுபான்மை இஸ்லாமிய குடும்பத்தை சார்ந்தவர்கள் மீது வகுப்புவாத வன்முறையாளர்களால் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியைத் தருகிறது. 2016 ஆகஸ்ட் 24 அன்று நள்ளிரவில் அரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தில் திங்கர்ஹரி கிராமத்தில் ஜஹருதீன் என்பவரது குடும்பத்தினர் மீது வகுப்புவாத வெறியர்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
எவ்வித காரணமும் இன்றி நள்ளிரவு நேரத்தில் இவர்களது குடிசையைத் தாக்கி இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது தடுத்த வயதான தம்பதிகள் இப்ராகீம், ரஷீதா ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டதில் படுகாயமுற்று இறந்துள்ளனர். வீட்டிலிருந்த ஜஹருதீன், அவர் மனைவி ஆயிஷா, 11 வயதான குழந்தை பர்வேஷ், நவீத் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். பின்னர் அக்குடும்பத்தைச் சார்ந்த இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதில் ஒருவர் 13 வயது சிறுமி. இந்த கொடுமையான சம்பவத்தை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வளவு கொடுமையான குற்றச் செயல்கள் நடத்தப்பட்ட பின்னரும் அரியானா மாநில காவல்துறை உடனடி குற்றவாளிகளைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க தயங்கியுள்ளனர். சிறுபான்மை மக்களுக்கு எதிராக எப்போதும் விஷத்தை கக்கி வரும் பா.ஜ.க முதலமைச்சர் ஆளும் மாநிலத்தில் காவல் துறையினரும் சிறுபான்மை மக்கள் மீதான இத்தகைய குற்றச் செயல்களை தடுக்கவோ குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவோ தயங்கி வருகின்றனர் என்பதையே இது காட்டுகிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது கவலை தரத்தக்க ஒன்று. இத்தகைய கொடிய செயலை செய்தவர்கள் குடி போதையில் இருந்த வகுப்புவாத சமூக விரோதிகள் என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய மனிதாபிமானமற்ற கொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் நடத்திய கயவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று அரியானா மாநில அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அப்பாவி சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டுள்ள இத்தகைய காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களை சாதி, மத வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் ஒருமித்த குரலில் கண்டிக்க முன்வரவேண்டுமென்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Write comments