‘காவிரியில் தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை வைத்து சம்பா சாகுபடி வேலைகளை தொடங்க முடியாது. எனவே, கூடுதல் தண்ணீர் விட வேண்டும்’ என்று விவசாயிகள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும், கூடுதல் தண்ணீர் கேட்டு, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டம் வரும் 16ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதற்கிடையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில், விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன், கன்னட திரைப்பட நடிகர், நடிகைகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வரும் 16ஆம் தேதி நடைபெறும் முற்றுகை போராட்டத்தில், தமிழக நடிகர், நடிகைகள் பங்கேற்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் காவிரி நீர் கிடைக்காததால் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. ஒருபோக சம்பா சாகுபடியைக்கூட மேற்கொள்ள முடியாமல் விளை நிலங்கள் பாலைவனமாக காட்சியளிக்கிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடகாவில் உள்ள திரைப்பட நடிகர், நடிகைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடிகர், நடிகைகள் போராட முன்வராதது விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக திரையுலகப் பிரமுகர்களை தமிழகம் தான் வாழ வைக்கிறது. நியாயத்தை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழ் திரைப்பட நடிகர் - நடிகைகள் போராட முன்வர வேண்டும். காவிரியில் கூடுதல் தண்ணீர் கேட்டு வருகிற 16ஆம் தேதி நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Write comments