ஹிந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வலியுறுத்தி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக வழக்குரைஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
பெரும்பாலான இந்தியர்களால் பேசப்படும் மொழி ஹிந்தியாகும். அனைத்து மக்களிடையே பொருளாதார, மத மற்றும் அரசியல் ரீதியான தகவல் தொடர்புக் கருவியாகப் பயன்படுத்தப்படுவதற்கான திறன் ஹிந்திக்கு அதிகமாக உள்ளது.
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது ஹிந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் தேவநாகரி வரி வடிவத்தில் ஹிந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
ஹிந்தியை தேசிய மொழியாக அறிவிப்பதை தாமதமின்றி மேற்கொள்வது அரசின் கடமையாகும். சமத்துவம், சகோதரத்துவம், ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு இது அவசியமாகும். இந்தியாவில் உள்ள 6 வயது முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஹிந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் அஸ்வினிகுமார் உபாத்யாய குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது
No comments:
Write comments