தமிழகம், கேரளாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் அமைப்பினருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 7 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் சேர்ப்பதற்காகவும், சதித்திட்டம் தீட்டி நாச வேலையில் ஈடுபடுவதற்காகவும் கூடியிருப்பதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக இளைஞர்களையும், பெண்களையும் மூளைச் சலவைச் செய்து, அவர்களை சிரியாவுக்கு அழைத்துச் சென்று, தீவிரவாதப் பயிற்சி அளித்து, பிறகு அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி நாச வேலையில் ஈடுபடுத்த திட்டம் தீட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி அவர்களோடு வேறு யாரேனும் தொடர்பு கொண்டுள்ளனரா என்பதை அறிந்து அவர்களையும் கைது செய்ய வேண்டும். ஏற்கனவே வட இந்தியாவில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல், அஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகள், ஒரிசாவில் மாவோயிஸ்ட்கள், ஆந்திராவில் நக்சலைட்கள் போன்று தென் இந்தியாவிலும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதால் ஒட்டு மொத்த இந்தியாவின் பாதுகாப்பிற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று மறைமுகமாக தீவிரவாத, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோரை பொது மக்களும் அடையாளம் கண்டு, விழிப்புணர்வோடு செயல்பட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இவ்வாறு தனது அறிக்கையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Write comments