குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள வங்கியில் வரிசையில் நின்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளை வாங்கிச் சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி இரவு, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்தார். மேலும், இந்த நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, டெல்லியில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு பணம் மாற்றச் சென்றார். அப்போது, மக்களுடன் வரிசையில் நின்று பணத்தை மாற்றிச் சென்றார் ராகுல்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தன்னிடம் உள்ள பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வரிசையில் நின்று மாற்றினார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள வங்கிக்கு ஹீராபென் இன்று காலை வந்தார். அப்போது, பணத்தை மாற்ற மக்களுடன் சேர்ந்து அவர் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார். பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தன்னிடம் இருந்த பழைய 1000 மற்றும் 500 ரூபாயாக மொத்தம் ரூ.4500 ரூபாய்களை அவர் மாற்றினார். இதில், 2000 ரூபாய் நோட்டு ஒன்றும் வழங்கப்பட்டது.





No comments:
Write comments