ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்க மருந்தில் சிக்கினார்:
உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மெல்டோனியம் என்னும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இருதய நோயாளிகள் பயன்படுத்தும் மெல்டோனியம் மருந்து உடலுக்கு ஊக்கம் அளிக்கக்கூடியதாகும். இதனை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பட்டியலில் சேர்த்து இருந்தது. ஆனால் இதனை கவனிக்காமல் தொடர்ந்து மெல்டோனியம் பயன்படுத்தியதால் ஷரபோவா சிக்கினார்.
விசாரணை:
குடும்ப டாக்டரின் ஆலோசனையின் படியே மெல்டோனியத்தை கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஷரபோவா, வேண்டுமென்றே தான் மெல்டோனியத்தை பயன்படுத்தவில்லை என்று விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் ஷரபோவாவை சர்வதேச டென்னிஸ் சங்கம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.
மேலும் ஷரபோவா மீதான ஊக்க மருந்து விவகாரம் குறித்து சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் 3 பேர் கொண்ட தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. ஷரபோவா விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். இரு தரப்பு வக்கீல்களும் வாதாடினார்கள்.
ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் தடை:
இந்த விசாரணையின் முடிவை சர்வதேச டென்னிஸ் சங்கம் லண்டனில் நேற்று அறிவித்தது. விசாரணையில் ஷரபோவா ஊக்க மருந்து விதிமுறையை மீறி செயல்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த தடை கடந்த ஜனவரி 26-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கால் இறுதி வரை முன்னேறிய அவரது ஆட்ட முடிவுகள் அழிக்கப்படுவதாகவும், அவர் பெற்ற தர வரிசை புள்ளிகள் மற்றும் பரிசு தொகை பறிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதிகம் சம்பாதித்தவர்:
டென்னிஸ் உலகில் அதிகம் பணம் சம்பாதித்த வீராங்கனையாக விளங்கிய 29 வயதான ஷரபோவா 2004-ம் ஆண்டில் விம்பிள்டன், 2006-ம் ஆண்டில் அமெரிக்க ஓபன், 2008-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், 2012, 2014-ம் ஆண்டில் பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர் பட்டங்களை வென்று அசத்தி இருந்தார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். தடையால் ஷரபோவாவின் டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வரக்கூடும்.
நியாயமற்ற 2 ஆண்டு கால தடையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்து இருக்கும் ஷரபோவா மீண்டும் டென்னிஸ் களம் திரும்ப சட்டரீதியாக போராடுவேன் என்று கூறியுள்ளார். தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் ஷரபோவா மேல் முறையீடு செய்யலாம் என்று தெரிகிறது.
செய்தி :: சாஹிப்...





No comments:
Write comments