அச்சுறுத்தும் வனவிலங்குகளை கொல்வதற்கு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கியது மிகவும் கண்டனத்திற்குரியது ஆகும் என மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவதேகர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, விவசாயிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் தொல்லைக்கொடுக்கும் நீலான் மற்றும் காட்டுப்பன்றிகள் குறிப்பிட்ட காலங்களுக்கு தீங்கிழைக்கும் மிருகங்களாக அறிவிக்கப்படும் என்றும் அவ்விலங்குகளை கொலை செய்ய மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்குகிறது என்று தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய மந்திரி மேனகா காந்தி "மத்திய அரசின் இந்த செயல்பாடு ஏன் என்று புரியவில்லை. யானை, காட்டுப்பன்றி மற்றும் குரங்குகளை கொல்ல மாநில அரசுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருப்பதாவது, பசு வதை தடை சட்டத்தை நாடு முழுவதும் அமுல்படுத்த ஆன்லைன் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும், வன விலங்கு பூங்காவை இந்தியாவில் தடை செய்யவேண்டும், குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக விலங்குகளை ஒரே இடத்தில் அடைத்து வைத்திருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விலங்குகளை கொலை செய்வது தொடர்பாக மத்திய அரசின் செயல்பாடுகளில் முரண்பட்டு நிற்கும் மத்திய மந்திரி மேனகா காந்தியின் இத்தகைய கூற்றால் பா.ஜ.க தேசிய களத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments