நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு எதிராக ஒரு வலுவான மெகா கூட்டணியாக கருதப்பட்ட தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - த.மா.க போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் உட்பட போட்டியிட்ட பெரும்பாலானவர்கள் டெபாசி இழந்தனர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தான் போட்டியிட்ட காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வியுற்றார். கூட்டணிக்கட்சித்தலைவர்களில் விஜயகாந்த் மற்றும் திருமாவளவன் தவிற வேறு யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் தோல்வியின் எதிரொலியாக த.மா.க தலைவர் ஜி.கே வாசன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனித்தனியாக தனது கட்சியின் மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்கள். இதில் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்ததே தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டதை அடுத்து அவ்விரு கட்சிகளும் வெகுவிரைவிலேயே கூட்டணியை விட்டு விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைபாடு என்ன என்பதை பத்திரிகையாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்று நான் சொல்லவில்லை, திமுகவும் அதிமுகவும் உள்ளாட்சித் தேர்தல்களில் கூட்டணி முறையை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. தேமுதிக மற்றும் தமாக பொருத்தவரை அவர்களோடு தொகுதி உடன்பாடு மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. கூட்டணியில் தொடரவேண்டும் என்பது யாருக்கும் நிர்பந்தம் இல்லை, கூட்டணியை விட்டு வெளியேற வேண்டுமானால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. ஆனால் எங்களை பொறுத்தவரை இந்த கூட்டணி தொடரவேண்டும் என்பதே எங்களின் நிலைபாடு என்று கூறினார்.

No comments:
Write comments