பா.ஜ.க.வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக தாக்கி உள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத பா.ஜ.க. தோல்விக்கு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்வாரா? என்று குஷ்பு கூறி உள்ளார்..
குஷ்பு விமர்சனம் செய்யும் அளவுக்கு தமிழக பா.ஜ.க. இல்லை. அதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. சட்டசபை தேர்தலுக்கு பொறுப்பு ஏற்று இளங்கோவன் ராஜினாமா செய்யவில்லை. அப்படி இருந்தால் தேர்தல் முடிவு வெளியாகிய உடன் அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். உள்கட்சி விவகாரத்தில் இளங்கோவன் ராஜினாமா செய்திருக்கிறார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கு தினந்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் சான்றாக அமைந்துள்ளது. குற்ற சம்பவங்களில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.
கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், முதல்வர்கள் பணியிடம் உள்பட அரசு துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பணியில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடுகிறது. ஆகவே அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே மக்களுக்கு நியாயம் கிடைக்கும். இதற்காக, பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் வருகின்ற 18-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
2-ம் கட்டமாக பள்ளி, கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. விரைவாக பூரண மதுவிலக்கை கொண்டுவதற்கான முயற்சியையும் எடுக்கவேண்டும். சிறார் இல்லத்தில் சிறுவர்கள் தப்பியோடியதும், அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது தற்கொலைக்கு முயன்றதும் வேதனையளிக்கிறது.
விசாரணையை தாமதப்படுத்தியதும், சிறார் இல்லத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் கொடுக்காமல் அடிமைகள்போல் நடத்துவதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று கருதுகிறேன். சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீண்டும் திருந்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்.
பாலாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சி கண்டிக்கத்தக்கது. இதனை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். டெல்லியில் நடைபெற உள்ள முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்று மாநில மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்த வேண்டும்" என்றார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments