சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற புதிய வீடியோ காட்சி போலீஸிடம் சிக்கியுள்ளதாம்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி அதிகாலை 6.30 மணியளவில் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை கொலையாளி யார் என்று கூட தெரியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் கொலையாளி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. சுவாதியின் நண்பர்கள், உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் அவரை கொலை செய்த மர்மநபர், நிச்சயம் சுவாதிக்கு நன்றாக தெரிந்தவராகவே இருக்க வேண்டும் என்று போலீஸார் கருதுகின்றனர். அந்த நபர் யார் என்று தெரியாததே போலீஸாருக்கு தலைவலியாக உள்ளது.
சுவாதியின் குடும்பத்தினர், போலீஸாருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காதது கொலையாளி குறித்த தகவல்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொலையை நேரில் பார்த்ததாக சூளைமேட்டை சேர்ந்த ஆசிரியர் தமிழ்செல்வன், போலீஸ் உயரதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அவர் அளித்த தகவலில் கூட கொலையாளி குறித்து எந்தவித துப்பும் துலங்கவில்லை. இதனால் சுவாதி கொலையில் உள்ள மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க முடியாமல் போலீஸார் சிரமப்பட்டு வருகின்றனர்.
சுவாதி கொலை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதில் தற்போது ஒரு வீடியோவில் கொலையாளியாக சந்தேகிக்கப்படும் மர்மநபர் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. போலீஸார் வெளியிட்ட கொலையாளி படத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபரின் உருவம் ஒத்துப் போகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர் கொலையாளியாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அந்த வீடியோ பதிவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் அந்த இருசக்கர வாகனம் சூளை நெடுஞ்சாலை வழியாக செல்கிறது. இதன்பிறகு அந்த நபர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அதைப்பார்த்த போலீஸார், அந்த இருசக்கர வாகன நம்பர், அதில் செல்பவரின் முகம் தெளிவாக உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். கொலையாளி என்று போலீஸார் சந்தேகிக்கும் மர்மநபர் குறித்து பல புகைப்படங்கள் வெளியானாலும் கொலையாளியின் முகம் மட்டும் எதிலும் தெளிவாக தெரியாதது விசாரணையின் தொய்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்கிறது போலீஸ் வட்டாரம்.
இதற்கிடையில் பெங்களூர், மைசூர் சென்ற தனிப்படை போலீஸாருக்கும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. சுவாதியின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.கள், அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.கள், இன்கம்மிங், அவுட் கோயிங் கால்கள் குறித்த விவரங்களை சேகரித்த போலீஸார், அதில் எதாவது கொலையாளி குறித்த தகவல் கிடைக்குமா என்று இரவும், பகலுமாக ஆராய்ந்து வருகிறார்கள். 5 லட்சத்துக்கும் அதிகமான விவரங்கள் உள்ளதால் அதிலிருந்து முக்கியமான பல தகவல்களை சேகரிக்க குறைந்தபட்சம் 10 நாட்களாவது ஆகும் என்கிறது தனிப்படை போலீஸ்.
சுவாதி கொலையில் நீதிமன்றம் விடுத்த காலக்கெடு முடிந்துள்ள நிலையில் போலீஸாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் போலீஸார் விழிபிதுங்கியுள்ளனர். கொலையாளி யார் என்பது தெரியாத வகையில் சுவாதியின் வழக்கு விசாரணை செல்கிறது. ஆனால் போலீஸ் உயரதிகாரிகளோ சுவாதி வழக்கு சரியான பாதையில் செல்வதாக சொல்கிறார்கள். மேலும், சுவாதி கொலை குறித்து தினந்தோறும் ஒரு தகவல்கள் வெளியாகி வருவதால் அனைத்து கோணங்களிலும் போலீஸாரின் சந்தேக பார்வை விழுந்துள்ளது.
சுவாதியுடன் பணியாற்றும் சக ஊழியர்கள், நண்பர்கள், நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் நேரடியாகவே களத்தில் இறங்கி சுவாதி வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சுவாதி வழக்கு விவரங்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படுகிறது. இப்போது கிடைத்துள்ள இருசக்கர வாகன பதிவு கூட ரகசியமாக வைக்க போலீஸ் உயரதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.
செய்தி :: சாஹிப்...




No comments:
Write comments