பசுக்களை கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள மராட்டிய மாநிலத்தில் பசுமாட்டு தோலினால் செய்யப்பட்ட கைப்பை என சந்தேகித்து பயணிக்கு தொல்லை தந்த ஆட்டோ டிரைவர் மீது பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பருன் காஷ்யாப்(24). மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிரியேட்டிவ் டிசைனராக பணியாற்றி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இங்குள்ள அந்தேரி பகுதியில் உள்ள தனது அலுவலகத்துக்கு இவர் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் சென்றுள்ளார்.
பருன் காஷ்யாப் வைத்திருந்த கைப்பையை பார்த்த அந்த ஆட்டோவின் டிரைவர், இந்த கைப்பை பசுமாட்டின் தோலில் செய்யப்பட்டதா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த பருன் காஷ்யாப், இல்லை இது ஒட்டகத் தோலினால் செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் விலைக்கு வாங்கினேன் என்று கூறியுள்ளார்.
எனினும், சந்தேகம் விலகாத டிரைவர், அந்த கைப்பையை எடுத்து தொட்டுப் பார்த்தார். சிறிது தூரம் சென்றதும் சாலை சிக்னல் அருகே ஆட்டோவை நிறுத்தி, அங்குள்ள ஒரு கோவில் வாசலில் அமர்ந்திருந்தவர்களை அழைத்தார்.
அங்குவந்த மூன்றுபேரிடம் மராத்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவர் ஏதோ சொன்னார். வந்தநபர்கள் பருன் காஷ்யாப்பின் பெயரை கேட்டுள்ளனர். அவரது பெயரை கூறியதும் ஆட்டோவில் அமர்ந்திருக்கும் நபர் பிராமணர் போலிருக்கிறது என்று நினைத்தபடி அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
இனி இந்த ஆட்டோவில் பயணம் செய்வது பாதுகாப்பாக இருக்காது என கருதிய பருன் காஷ்யாப், அதுவரை பயணம் செய்த தூரத்துக்கான பணத்தை தந்துவிட்டு அந்த ஆட்டோவில் இருந்து இறங்கி வேறொரு ஆட்டோ மூலம் தனது அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், இச்சம்பவம் தொடர்பாக அந்த ஆட்டோ டிரைவர்மீது டி.எம்.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments