கஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார், இவ்விவகாரத்தில் அவரது நிலைபாடு என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவர் குலா நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் விவாதத்தின் போது பேசிய ஆசாத் கூறும்போது " நாட்டில் தலித்களுக்கு எதிரான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து பல கட்சிகளிலிருந்தும் கண்டனம் வெளியாகிய பின்னரே பிரதமர் நரேந்திரமோடி அது தொடர்பாக வாய் திறந்தார். அதுவும் பாராளுமன்றத்தில் வைத்து அல்லாமல் தெலுங்கானாவில். அதே சமயம் கஷ்மீர் விவகாரத்தில் ஏன் இன்னும் மவுனம் காத்து வருகிறார்? கஷ்மீரில் அனுதினமும் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்து கொண்டிருக்கிறார்கள்.
இராணுத்தினரின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இனவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கு நிறையவே வித்தியாசம் இருக்கிறது. கஷ்மீரை மனதளவில் நேசிக்காமல் இந்தியாவின் ஒரு அங்கமாக கருதுவதில் எந்த பயனும் இல்லை. கஷ்மீர் மக்களின் மனங்களை வெல்லாமல் அவர்களை உங்களால் வெற்றி கொள்ளவே முடியாது. ஆயுதங்களை கொண்டு அவர்களை கட்டுப்படுத்திவிடலாம் என நீங்கள் நினைத்தால் அது நடக்காது. அனைத்து கட்சிகளின் கூட்டத்தையும் கூட்ட வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் ஆட்சியை போன்றே தற்போதைய ஆட்சியும் நடைபெறுவதாக மோடி கூறுகிறார். அது வெறும் வெற்றுப்பேச்சு.
கஷ்மீரில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை ஏற்கமுடியாது. கஷ்மீர் பிரச்சனைக்கு முறையான முயற்சியை மேற்கொண்டு தீர்ப்பதற்கான வேலைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்னாத்சிங் நிச்சயம் தான் இந்த பிரச்சனையை மேல் சபையில் விவாததிற்கு கொண்டு செல்வேன் என உறுதி அளித்துள்ளார். அனைத்து கட்சிகளுடன் ஒன்றினைந்து கஷ்மீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

No comments:
Write comments