ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவையில் ஜெயின் சமூகத்தைச்சேந்த சாமியார் தருண் சாகர் நிர்வாண கோலத்தில் வந்து உரையாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநில சட்டப்பேரவையில் வந்து உரையாற்ற தருண் சாகருக்கு கல்வித்துறை அமைச்சகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக பிரத்யேக இருக்கை வசதியும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசின் அழைப்பை ஏற்று தருண் சாகர் நிர்வாண கோலத்தில் அவைக்கு வந்து உரையாற்றினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் அவையில் பங்கேற்று பேசியதாவது "அரசியல் வழிமுறைகளை தர்மம்(மதம்) கடுப்படுத்த வேண்டும். தர்மம் கணவனை போன்றது, அரசியல் என்பது மனைவி போன்றது. ஒவ்வொரு மனைவியையும் பாதுகாக்க வேண்டியது அவளது கணவனின் கடமையாகும். அதே போல ஒவ்வொரு மனைவிமார்களும் தனது கணவனுக்கு மதித்து நடப்பது அவளது கடமையாகும். இது போன்ற கட்டுப்பாடுகள் தர்மத்திற்கும் அரசியலுக்குமிடையே இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் கட்டுப்படாத யானையை போன்றாகிவிடும்.
நமது நாட்டில் பெண் சிசுக்கொலை ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. சமூகத்தில் நடைபெறும் இந்த பெண் சிசுக்கொலைகளால் பல்வேறு குற்றங்கள் அதிகரிக்கின்றது. இதனை தடுக்க தம்மிடம் ஒரு நல்ல யோசனை இருப்பதாக தெரிவித்தார். பெண் சிசுக்கொலை விவகாரத்தை அரசியல், சமூகம் மற்றும் மத ரீதியாக என மூன்று வழிகளிலும் தடுக்க வேண்டும். முதலாவதாக அரசியல் ரீதியாக பெண் குழந்தைகள் இல்லதவருக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்க கூடாது. சமூகம் சார்ந்து பார்க்கும்போது பெண் பிள்ளைகளே இல்லாத வீடுகளில் தங்கள் பிள்ளைகளை மணம் முடித்து வைக்க்கூடாது, மதம் சார்ந்த வழிமுறையில் பெண் பிள்ளைகள் இல்லாத வீடுகளிலிருந்து எந்த காணிக்கையையும் மத குருமார்கள் பெறக்கூடாது. இத்தகை திட்டங்களை நடமுறைப்படுத்துவதின் மூலம் பெண் சிசுக்கொலைகளை வெகுவாக குறைக்கலாம் என தருண் சாகர் தெரிவித்தார்.
பாராளுமன்றம் என்பது மக்களின் குறைகளை தீர்க்கக்கூடிய இடமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது நிலையை பார்க்கும்போது பாராளுமன்றத்தில் தான் அதிக பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் இருக்கும் 160 எம்.பிக்கள் குற்ற பின்னனி கொண்டவர்கள் என்பதை தெரிவித்தார். குற்றப்பின்னனி கொண்டவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தொடர்பாக பேசிய அவர் கூறும்போது, "பயங்கரவாதமும் நமது நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. நமது அண்டை நாடு நமக்கு பெரும் தொல்லை கொடுத்து வருகிறது. யாராவது ஒருவர் ஒருமுறை தவறு செய்தால் அறியாமையில் செய்துவிட்டார் என்று சொல்லலாம், இரண்டாவது முறையாக தவறு செய்தால் அப்பாவி என்று சொல்லலாம், மூன்றாவது முறையாக தவறு செய்தால் அவர்களை பிசாசு என்று கூட சொல்லலாம், ஆனால் ஒருவர் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருப்பவர் என்று கருதினால் அது பாகிஸ்தானகத்தான் இருக்க முடியும். பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு இந்தியா தொடர்ந்து மன்னிப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது" என தெரிவித்தார்.
மத்தியில் ஆட்சி செய்து வரும் நரேந்திர மோடியின் அரசை வெகுவாக பாராட்டி பேசிய தருண் சாகர், மேலும் கூறியதாவது " கங்கை நதியை சுத்தம் செய்ய வேண்டுமெனில் முதலில் ரிஷிகேஷ் பகுதியையும் பிறகு ஹரித்வார் பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் முழு கங்கை நதியும் சுத்தமாகிவிடும். அதே போல இந்த அவைக்கு நான் கூறும் அறிவுரை என்ன வென்றால் முதலில் தர்மத்தை இந்த அவையில் நிலை நாட்டுங்கள்.. அதன் பிறகு ஒட்டுமொத்த அவையும் சுத்தமாகிவிடும். ஹரியான அரசு அரசியலை காவிமயமாக்குகிறது என்று சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். அப்படி சொல்லாதீர்கள் அவர்கள் அரசியலை சுத்தமாக்குகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். இவ்வாறு தருண் சாகர் தெரிவித்தார்.
இதனை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சட்டப்பேரவையில் உரையாற்றுபவர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் இருக்க வேண்டும். எம்.எல்.ஏ, எம்.பி, கவர்னர், மத்திய அமைச்சர், பிரதமர் இப்படி எந்த ரீதியிலும் அரசியல் அதிகாரம் இல்லாத சாமியார் சட்டப்பேரவைக்கு வந்து உரையாற்றுவது என்பது அரசியல் சாசன சட்டத்தை மீறுவதாகும், என்றும் அதிலும் நிர்வாண கோலத்தில் வந்து அவையை அவமரியாதை செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாடப்பட்டுள்ளது.

No comments:
Write comments