கர்நாடகா மாநிலம் மங்களூரில் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படிக்கும் மாணவிகள் பர்தா மற்றும், ஸ்கார்ஃப் அணிவதற்கு தடைவிதித்ததை அடுத்து, கல்லூரியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்களூரில் இயங்கி வரும் தனியார் ஃபார்மஸி கல்லூரியான ஸ்ரீனிவாஸ் காலேஜ் ஆஃப் ஃபார்மஸி தங்கள் கல்லூரியி பயிலும் முதலாம் ஆண்டு இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிவதற்கும், ஸ்கார்ஃப் அணிவதற்கும் தடை விதித்தது. அதே போல் மாணவர்களும் நீண்ட தாடி வைப்பதற்கு தடைவிதித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாபுலர் பிரண்ட் அமைப்பினர் கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து கல்லூரி வளாகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி நிர்வாகம் மத சுதந்திரத்தில் தலையிட்டு அதன் உரிமைகளை பறிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்து முடிவெடுக்க இரண்டு வாரம் தேவை என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் கல்லூரியின் நிர்வாகத்தலைவர் ஸ்ரீனிவாச ராவ் கூறும்போது "அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான ஆடை கட்டுப்பாடு இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் தலையில் ஸ்கார்ஃப் அணிவதற்கு தடை விதித்தோம். அதிலும் குறிப்பாக தங்கள் பிள்ளைகளை இக்கல்லூரியில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் வந்த போதே அவர்களிடம் இக்கல்லூரி வளாகத்திற்குள் பர்தா அணிய அனுமதிக்கமாட்டோம் என தெளிவாகவே தெரிவித்திருந்தோம்.
எங்கள் கல்லூரியை பொறுத்தவரை அனைவருக்கும் பொதுவான சீறுடை இருக்கிறது. இதனை மூன்று மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் முறையாக கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டில் மாணவர் சேர்க்கையின் போதும் இதனை நாங்கள் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம். ஆனால் இதனை தற்போது எதிர்கின்றனர். இப்பிரச்சனைக்கான தீர்வை 15 நாட்களில் கொண்டு வருவோம்" இவ்வாறு தெரிவித்தார்.

No comments:
Write comments