Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 28, 2016

ஓஷோ சொன்ன கதைகள்

 

ஓஷோ என்ற ஓஷோ ரஜ்னீஷ், இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் போபால் அருகே குச்சுவாடா என்ற குக்கிராமத்தில் 1931 டிசம்பர் 11ஆம் தேதியன்று மத்தியதர வர்க்கத்து ஜெயின் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார். தனது இருபத்தொன்றாம் வயதில் ஞானமடைந்ததாகச் சொல்லிக்கொள்ளும் இவர், உலகின் அனைத்து மதங்களையும் தத்துவங்களையும் தனது கேள்விகளால் தர்க்கத்துக்குள்ளாக்கியவர்.

பின், இந்தியாவில் பூனே ஆசிரமத்தை அமைத்தார். அங்கிருந்து அமெரிக்கா சென்று ஒரிகான் என்ற இடத்தை விலைக்கு வாங்கி, நூறு சதுர மைல் அளவில் ஓர் ஆசிரமத்தை அமைத்தார். பின் அமெரிக்க அரசாங்கத்தால் நிரூபிக்கப்பட முடியாத குற்றச்சாட்டில் பழி தீர்க்கப்பட்டு வெளியேற்ற, உலக நாடுகளைச் சுற்றிவந்து இந்தியா வந்தடைந்தார்.

புத்தர், கிருஷ்ணர், லா வோட்சு, தம்மபதம், யோகம், கிறிஸ்து மற்றும் உலக பத்திரிகையாளர்களின் கேள்வி - பதில் முதலான தலைப்புகளில் சுமார் 675 நூல்களை எழுதியிருக்கும் இவர், கடவுளின் இருப்பை மறுத்து ஆனால், கடவுள் தன்மை பிரபஞ்சம் முழுக்க உள்ளது என நிறுவினார். மாபெரும் கதைசொல்லியான ஓஷோ, தனது நூல்களில் மேற்கோள் காட்டும் கதைகள் பெரும்பாலும் நாம் இதுவரை கேட்டறியாதவை. அவை, வெகு நூதனமாகவும் வினோதமாகவும் விடுதலைக்கு அடித்தளமாகவும் இருக்கின்றன. அவரது நூல்களிலிருந்து அவர் சொன்ன கதைகளைத் தழுவி தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது.

மரண தேவன் - 4

பண்டைய பாக்தாத் நாட்டின் அரண்மனையில் அந்திப்பொழுதின் தன்னந்தனிமையில் அந்தப்புரத் தோட்டத்தில் வீரமும் தீரமுமிக்க பேரரசன் உலாவிக் கொண்டிருந்தான்.

அப்போது அடர் கறுப்புநிறத்தில் கொடூரத் தோற்றத்தோடு கறுநிற அங்கியில் உருவமொன்று அவன்முன் தோன்றியது. காற்றுகூட நுழைய அனுமதிகேட்கும் இவ்விடத்தில் இவ்வுருவம் எப்படி வந்தது என்று யோசித்தான் அந்தப் பேரரசன். எனினும் அதை புறந்தள்ளிவிட்டு பேரரசனுக்கே உரிய தொனியில் பேசினான்.

'யார் நீ? இங்கு எப்படி வந்தாய்? என்ன காரணம்?'

கறுப்பு உருவம் பதில் சொல்லலாயிற்று. ‘நானே அண்டம் நடுங்கும் மரணதேவன். நாளை மாலை சரியாக ஆறு மணிக்கு உன் உயிரை வாங்கப் போகிறேன். செய்யவேண்டிய வேலைகளை முடித்துக் கொள். ஞாபகமிருக்கட்டும் நாளை மாலை ஆறு மணிக்கு'

இப்படிச் சொல்லிவிட்டு அது மறைந்துபோயிற்று.

பேரரசன் திகைத்துப் போனான். அப்போது அவன் உடலிலிருந்து முத்துமுத்தாக வியர்வைத் துளிகள் பெருகியோட, மந்திரி பிரதானிகளை வரவழைத்து ஆலோசனை செய்யத் தொடங்கினான்.

`வந்தது காலதேவன்தான்! ஐயமில்லை. இந்த மரணத்திலிருந்து எப்படித் தப்பிப்பது? சரியாக ஆறு மணி என்று சொல்லிவிட்டுச் சென்றான். ஆறு மணிதாண்டி ஒரு நிமிடம் ஆகிவிட்டாலும் போதும். பிறகு, என்றுமே மரண பயம் இன்றி வாழலாம். எனவே, தப்பிக்கும் வழியைக் கூறுங்கள்' என்றான்.

எல்லோரும் ஆளுக்கு ஒரு வழியைக் கூறினார்கள். ஆனால் எதுவுமே சரியாக இருப்பதாகத் தோன்றவில்லை. அப்போது இருப்பவர்களில் வயதான மந்திரி ஒருவர்,

`வல்லமை பொருந்திய குதிரையொன்றில் ஏறி, இந்நாட்டை விட்டு வேறெங்காவது தப்பிச் சென்றுவிடுங்கள். பிறகு மரணதேவன் இங்கே வந்து பார்த்துவிட்டு ஏமாந்துவிடுவான். அதற்குள் நேரமானது ஆறு மணியைத் தாண்டிவிடும். பிறகு, நீங்கள் அச்சப்படாமல் தைரியமாக இருக்கலாம்' என்று கூறினார்.

பேரரசனுக்கு இதுவே தலைசிறந்த யோசனையாகப்பட்டது. உடனே, அவன் வல்லமைபொருந்திய குதிரையொன்றில் ஏறி நாட்டைவிட்டு வெளியேறினான். அப்போதும் நிற்காமல், உண்ணாமல், உறங்காமல் பயணத்தைத் தொடர்ந்து மறுநாள் அந்திசாயும் நேரத்தில் ஒரு பெரிய மரத்தருகே வந்து இறங்கி, அதன் கிளைத்துப் படர்ந்திருந்த வேரில் அமர்ந்தான்.

அச்சமயத்தில் மரத்தின் மேலிருந்து சிரிக்கும் சப்தம் கேட்கவே, திடுக்கிட்ட பேரரசன் அண்ணாந்து பார்த்தான்.

அங்கே கிளையில் மரணதேவன் அமர்ந்திருந்தான்.

`என்ன பேரரசா, உன் உயிர் இவ்விடத்தில்தான் போகப்போகிறது என்று, நீ பிறக்கும்போதே என்னால் எழுதப்பட்டுள்ளது உன் விதி! நேரம் இப்போது சரியாக ஐந்து ஐம்பத்தெட்டு ஆகிறது. நீ மனதை மாற்றிக்கொண்டு அரண்மனையிலே தங்கிவிடுவாயோ அல்லது குதிரைக்கு காலொடிந்துபோனதோ என்றெல்லாம் பயந்தேன்! இருப்பினும், நீ சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தாய். இப்போது சரியாக மணி ஆறு ஆகிறது. வா போகலாம்' என்றான் மரணதேவன்.

பேரரசன் சிலைபோல் மரணதேவனை பார்த்தபடி நின்றிருந்தான்.


தொகுப்பும், தமிழ் வடிவமும்: சென்னி 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic