ஜித்தா (25 ஆக,2016): ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகர்களுக்கு உதவும் முகமாக ஹஜ் தன்னார்வலப் பணிகள் தயார் நிலையில் உள்ளதாக இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் அமைப்பினர் ஜித்தாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் அமைப்பினர் கடந்த 11 வருடங்களுக்கும் மேலாக ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகர்கள், குறிப்பாக இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர்.
அதன்படி இவ்வருடமும் அதற்கான ஏற்பாடுகளை இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் அமைப்பினர் செய்து வருகின்றனர். இவ்வருடம் சுமார் 800 இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் தன்னார்வலர்கள் ஹஜ் களத்தில் உதவி புரிய தயாராக உள்ளனர்.
ஜித்தாவில் புதனன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் ஜித்தா நிர்வாகிகள் இதனை தெரிவித்தனர்.
ஹஜ் கடமை நடைபெறும் முக்கிய இடங்களான மினா, அரஃபா, முஸ்தலிபா ஆகிய பகுதிகளில் இந்த தன்னார்வலர்கள் இருப்பார்கள் என்றும் அங்கு இருக்கும் ஹஜ் யாத்ரீகர்களில், வயோதிகர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், இடம் மாறி வழிதெரியாமல் செல்பவர்கள் என பலருக்கும் இவர்கள் உதவி புரிவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் சவூதியில் பணியாற்றும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா , ஐதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சார்ந்த ஹஜ் தன்னார்வலர்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவி புரிவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்கள் ஜித்தா விமான நிலையம் வந்தடைவது முதல் மக்காவில் அவர்கள் தங்குமிடம் வரை குறிப்பிட்ட பணிகளில் சில தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், ஹஜ்ஜின் உச்சகட்டமான மினா, அரஃபா, முஸ்தலிபா ஆகிய இடங்களில் இவர்களது பணி மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் ஹாஜிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி மற்றும் இதர உதவிகள் வழங்க, ஃபெடர்னிட்டி ஃபாரம் அமைப்பினைச் சேர்ந்தவர்களுக்கு சவூதி சுகாதார அமைச்சகம் சிறப்பு பயிற்சி வழங்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இச்சந்திப்பின்போது இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் ஜித்தா பிரிவின் தெற்கு மாகான தலைவர் ஷம்சுதீன், முஹம்மது அலி, ஹஜ் தன்னார்வ ஒருங்கிணைப்பாளர் முதஸ்ஸிர், டி.ஃபைசல் மற்றும் தமிழ் பிரிவு தலைவர் கே.எம்.ஏ ஷரீப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஃபெடர்னிட்டி ஃபாரம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Write comments