என்னை மத்திய நிதி அமைச்சராக ஆக்கினால் அருண் ஜெட்லியை விட சிறப்பாக செயல்படுவேன் என பா.ஜ.க முத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவின் மத்திய அமைச்சரான அருன் ஜெட்லி மற்றும் சுப்பிரமணிய சாமியிடையேயான மறைமுக வார்த்தை போர் சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கி கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். குறிப்பாக முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் விவகாரத்தில் சுப்பிரமணிய சாமி நேரடியாகவே அருண் ஜெட்லியை கடுமையாக விமர்சித்தார். பதிலுக்கு அருண் ஜெட்லியும் யாருடைய தலையீடும் இன்றி மத்திய அரசு முடிவெடுக்கும். மத்திய அரசுக்கு ஆணையிட எந்த தனி மனிதருக்கும் அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த சுப்பிரமணிய சாமி கூறிய கருத்து மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமி கூறியதாவது " நானோ பொருளாதாரம் பயின்றவன், அருண் ஜெட்லியோ சட்டம் பயின்றவர். அப்படியிருக்க நிதி அமைச்சர் துறையில் என்னை விட சிறப்பாக எவ்வாறு அருண் ஜெட்லியால் செயல்பட முடியும்? அருண் ஜெட்லியை நீக்கி விட்டு என்னை நிதி அமைச்சராக மாற்றினால் அவரை விட சிறப்பாக என்னால் செயல்பட முடியும். மேலும் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பண வீக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியும்" என தெரிவித்தார்.
வட இந்தியாவில் பிராமணர்களுக்கும், தென் இந்திய பிராமணர்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது என அருண் ஜெட்லியுடனான மோதலை நகைச்சுவையாக தெரிவித்தார். மத்திய அரசு உங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறதா? என கேட்டதற்கு யாராலும் என்னை கட்டுப்படுத்த முடியாது என்றும், தன் மனதில் பட்டதை தெரிவிக்க யாரிடமும் அனுமதி கோரமாட்டேன் என கூறினார்.

No comments:
Write comments