கஷ்மீரில் மெஹ்பூபா ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டுமென பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
கஷ்மீரில் தொடர்ந்து 70 நாட்களாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சாமி கூறியதாவது, "கஷ்மீரில் பி.டி.பி-பா.ஜ.கவின் கூட்டணி ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. கஷ்மீரில் வன்முறையை கட்டுப்படுத்த கூடுதலாக இராணுவத்தினரை அனுப்ப வேண்டும். ஆரம்பத்தில் பா.ஜ.க இந்துக்க பெரும்பான்மையாக இருக்கும் ஜம்மு மற்றும் லடாக்கில் வெற்றியும், கஷ்மீரில் பி.டி.பியின் வெற்றியும் அம்மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்லும் என நினைத்தோம். ஆனால் நான் உட்பட பலரும் இப்போது அது தோல்வி அடைந்துவிட்டதாகவே கருதுகிறோம். மெஹ்பூபா முப்தி பதவி விலக கூடாது மாறாக அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்" என சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.
புதுடெல்லியில் தனியார் தொலைகாட்சி நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட விவாதம் ஒன்றில் பங்கெடுத்த சுப்பிரமணிய சாமி இவ்வாறு தெரிவித்தார். இதே நிகழ்ச்சியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் ஐதராபாத் எம்.பியான அசாசுதீன் உவைசியும் பங்கெடுத்தார். காரசாரமாக நடைபெற்ற இவ்விவாதத்தில் அசாசுதீன் உவைசியை தேச துரோகி என்றும் இளைஞர்களை வழிகெடுக்கக்கூடியவர் என்றும் விமர்சனம் செய்தார்.
நவீன் அறிவியல் மூலம் வரலாற்றை முன்னோக்கி பார்த்தோமேயானால் தற்போது முஸ்லிம்களாக இருக்கக்கூடியவர்களின் முன்னோர்கள் இந்துக்களாகவே இருந்தார்கள். இதை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் தேச துரோகிகளே, உவைசியும் தேச துரோகிதான் என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசிய உவைசி, இந்திய அரசியல் சாசன சட்டத்தின் எந்த இடத்திலும் 'பாரத் மாதா கீ ஜெய்' என்று சொன்னால் தான் தேசப்பற்று உள்ளவன் என்று சொல்லப்படவில்லை. எனவே தான் ஒரு போதும் அதனை உச்சரிக்க மாட்டேன். இந்திய தேசியவாதத்தை மக்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக இந்து தேசியவாதத்தை திணிக்கும் முயற்ச்சி நடக்கிறது. குறிப்பிட்ட கோஷத்தை எழுப்பவேண்டுமென யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என உவைசி தெரிவித்தார்.

No comments:
Write comments