உலகின் நிதிசார்ந்த, சக்திவாய்ந்த 50 பெண்மணிகளின் பட்டியலில் இந்தியாவின் வங்கித் துறையைச் சேர்ந்த மூன்று பெண்மணிகள் இடம்பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பார்ச்சூன் பத்திரிகை, ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில், அமெரிக்கப் பெண்மணிகளுக்கு தனிப்பட்டியலும் பிற உலக நாடுகளுக்கு தனிப்பட்டியலும் தயாரித்து வெளியிடுகிறது. இதில், 2016ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த (அமெரிக்கா தவிர்த்து) பெண்மணிகள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா (60) இரண்டாம் இடம் பிடித்துள்ளார். வங்கியின் வாரா கடன்களை வசூலிக்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு போராடிவரும் அருந்ததி இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக உள்ளார். மேலும் ரகுராம் ராஜனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவிக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இயக்குநர் சாந்தா கோச்சர் (54) இப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. போதிய வருவாயை இந்தாண்டில் ஈட்டாதபோதிலும், மன உளைச்சலால் விற்கப்படும் சொத்துகளை (distressed assets) கையாளுவதில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளார். மேலும் வங்கியில் டிஜிட்டல்மயத்தை விரிவுபடுத்தியதோடு, பெண் ஊழியர்களை ஒரு வருடத்துக்கு வீட்டிலிருந்தபடியே பணிபுரியும் வசதியையும் உருவாக்கியவர் இவர்.
அதேபோல, இந்தியாவின் வேகமாக வளர்ந்துவரும் பொதுத்துறை வங்கியான ஆக்சிஸ் வங்கியின் சி.இ.ஒ. சிகா சர்மா (57) பட்டியலில் 19ஆவது இடத்தில் உள்ளார்.
இந்த சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் பாங்கோ சாண்டனர் குழுமத்தின் செயலாக்கத் தலைவர் அனா போடின் முதலிடத்தில் உள்ளார்.
கடந்த வாரம் வெளியான சக்திவாய்ந்த 50 அமெரிக்கப் பெண்மணிகளின் பட்டியலில் பெப்சி கம்பெனி சி.இ.ஒ. இந்தியாவைச் சேர்ந்தவரான இந்திரா நூயி இரண்டாம் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments