அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 52 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என சமீபத்திய கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
வரும் நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடை பெறுகிறது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரியும் குடியரசு கட்சியின் சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், சி.என்.என்/ஓ.ஆர்.சி. சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதன்படி, ஹிலாரிக்கு 52 சதவீத ஆதரவும் ட்ரம்புக்கு 43 சதவீத ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது. ஹிலாரி 9 சதவீத கூடுதல் ஆதரவுடன் முன்னிலையில் உள்ளார். இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பைவிட இந்த முறை ஹிலாரிக்கான ஆதரவு 7 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோல சிபிஎஸ் நியூஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் ஹிலாரிக்கு 46 சத வீதமும் ட்ரம்புக்கு 39 சதவீத மும் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பிலடெல்பியாவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டுக்குப் பிறகு ஹிலாரிக்கான ஆதரவு பெருகி உள்ளது.
ஊடகங்கள் மீது ட்ரம்ப் தாக்கு:
அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், டொனால்டு ட்ரம்ப் ஊடகங்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுபற்றி ட்ரம்ப் கூறும்போது, “சிஎன்என் நியூஸ் நெட்வொர்க் பொய்யான செய்திகளை வெளியிடுகிறது. மொத்தத்தில் கிளின்டன் நியூஸ் நெட்வொர்க் போல் தெரிகிறது. இதுபோல நியூயார்க் டைம்ஸும் நேர்மையற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மேல் அவர்களால் தொழிலில் தாக்குப்பிடிக்க முடியாது” என்றார். எனினும் பாக்ஸ் நியூஸ் பற்றி அவர் விமர்சனம் செய்யவில்லை.
ட்ரம்ப் மீது ஹிலாரி புகார்:
ஹிலாரி கிளின்டன் கூறும் போது, “எனது கணவர் மற்றும் நான் பல ஆண்டுகளாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வருமான வரி பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், ட்ரம்ப் இந்த விவரத்தை வெளியிடவில்லை. இதன்மூலம் அவர் அமெரிக்க மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுக்கிறார். இப்போதாவது அவர் அதை வெளியிட வேண்டும்” என்றார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments