அமைதிக்கு இலக்கணம் தமிழகம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம்! காவேரி நதி நீர் பிரச்சனையில் வரலாறு காணாத வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த போதும் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டிய தமிழக மக்களை காணும் போது அடித்து சொல்லலாம் தமிழகம் அமைதியின் இலக்கணம் என்று.
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்குமிடையே காவேரி நதி நீர் பிரச்சனை காலங்காலமாக இருந்து வந்தாலும், கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிட்டது. ஆனால் எதற்கோ காத்திருந்தவர்கள் போல கர்நாடகமெங்கும் வன்முறை வெடித்தது. தமிழர்களை தேடிப்பிடித்து தாக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற துவங்கியது.
வரலாறு காணாத வன்முறை சம்பவங்கள் இவ்வருட காவேரி பிரச்சனையில் உருவாகியது. வன்முறைக்கே பெயர் போனவர்கள் போல பேருந்துகள் அடித்து நொறுக்கபப்ட்டது. இவ்வளவு நடந்தும் தமிழகம் அமைதி காத்தது. ஆனால் எந்த ஒரு பாவமும் அறியாத தமிழக லாரி டிரைவர்களை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தியது, ஒரு குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற சம்பவங்களையெல்லாம் கண்ட தமிழக மக்கள் தங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்த முடிவு செய்து இன்று மாநிலம் தழுவிய முழு கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.
வணிகர் சங்கங்கள், விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகள் என அனைவரும் ஒன்றாக கைகோர்த்து இந்த பந்திற்கு ஆதரவு அளித்தது. தமிழக மக்கள் தங்கள் வேதனையை அழகான முறையில் வெளிக்காட்டினர். சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, தூத்துக்குடி என அனைத்து பெரு நகரங்களிலும் முழு கடையடைப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஜனநாயக ரீதியாக போராடிய தமிழக மக்கள் மீண்டும் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். ஒரு வன்முறை சம்பவம் கூட நிகழாது மாநிலம் தழுவிய கடையடைப்பு நிகழ்ந்துள்ளது என்றால் அது தமிழகத்தில் மட்டுமே இருக்க முடியும்.
சாது மிறண்டால் காடு கொள்ளாது என்பார்கள், அது போலவே தமிழக மக்கள் சாதுவாய் இருக்கிறார்கள். இதனை நினைத்து கர்நாடக வன்முறையாளர்கள் தப்பு கணக்கு போட்டுவிடக்கூடாது. ஒருவருக்கொருவர் கொடுத்து உதவும் மனப்போக்கினை ஏற்றெடுக்க வேண்டும். வளமான தேசத்தை உருவாக்க இந்தியா என்ற குடைக்குள் அணி திரள வேண்டும். அதற்கு எப்பொழுதும் தமிழகம் தயாராகவே இருக்கிறது. இதனை நீங்களும் உணர வேண்டும்.
- முத்து

No comments:
Write comments