ஆம் ஆத்மி அரசின் அமைச்சர்கள் சிறைக்கு போவதைப் பார்க்கும் போது, கெஜ்ரிவால் மீது எனக்கு நம்பிக்கை போய் விட்டது என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். ஊழலை தடுக்க வலுவான லோக்பால் அமைக்க வேண்டும் என்று கோரி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில் டெல்லியில் பிரம்மாண்ட போராட்டம் நடந்தது.
அந்த போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி உள்ளிட்டோர் முக்கிய பங்கு வகித்தனர். அதன்பின், ஆம் ஆத்மி கட்சியை துவக்கிய கெஜ்ரிவால் தேர்தலில் வெற்றி பெற்று, டெல்லி முதல்வரானார். தற்போது அவரது அமைச்சர்கள் சிலர் வழக்குகளில் சிக்கியுள்ளனர். கடந்த வாரம், சமூகநலத் துறை அமைச்சராக இருந்த சந்தீப்குமார், ஆபாச வீடியோவில் சிக்கி பதவி இழந்ததுடன் சிறைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அன்னா ஹசாரே அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் என்னுடன் இருந்த போது, கிராம சுயராஜ்யம் என்ற புத்தகத்தை எழுதினார். இப்போது அவரது ஆட்சியை அப்படி உள்ளதாக ெசால்ல முடியுமா? அவர் அரசியலில் குதித்த போது, ‘நீ இனி நாடு முழுவதும் சுற்றப் போகிறாய்.
எல்லோரும் உன் பின்னால் வருவார்கள். அவர்களில் நன்னடத்தை உள்ளவர்களை எப்படி கண்டுபிடிப்பாய்?’ என்று கேட்டேன்.
அதற்கு அவரிடம் பதில் இல்லை. நான் சொன்னது இப்போது நடந்து வருகிறது. அரசியலில் கெஜ்ரிவால் வித்தியாசமாக செயல்படுவார், நாட்டை புதிய திசைக்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவரது அமைச்சர்கள் சிலர் சிறைக்கு போகிறார்கள். சிலர் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். அதை எல்லாம் பார்க்கும் போது நான் மிகவும் வேதனைப்படுகிறேன். கெஜ்ரிவால் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கை போய் விட்டது. இவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

No comments:
Write comments