முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.கவின் ராஜ்யசபா எம்..பியாக இருந்து வந்த நவ்ஜோத் சிங் சித்து புதிய கட்சியை துவங்கியுள்ளார். தனது கட்சிக்கு "ஆவாஜ்-இ-பஞ்சாப்" என பெயரிட்டுள்ளார்.
நவ்ஜோத் சிங் சித்து பல ஆண்டுகாலம் பா.ஜ.கவின் தலைவராக இருந்து வந்தார். ராஜ்யசபா எம்.பியாக இருந்து வந்த சித்து தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததோடு பா.ஜ.கவிலிருந்தும் வெளியேறினார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டுவந்தது. இருப்பினும் பஞ்சாப் தேர்தலில் பா.ஜ.க சார்பில் தான் முன்னிருத்தப்பட வேண்டும் என்பதே சித்துவின் விருப்பமாக இருந்தது என கூறப்படுகிறது. இருப்பினும் தமக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படவில்லை என கூறி பா.ஜ.கவை விட்டு வெளியேறினார்.
இதனை அடுத்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியில் இணையுமாறு சித்துவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இருவருக்குமிடையேயான சந்திப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. தான் பஞ்சாப் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தப்படவேண்டும் என்ற நிபந்தனயை சித்து முன்வைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வாரு எதுவும் குறிப்பிடாமல், சித்து சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும் என்பதற்காக நேரம் வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
சித்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தாலும் சரி இணையாவிட்டாலும் சரி அவர் தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அந்த மரியாதை எப்பொழுதும் தொடரும் என தெரிவித்தார். இந்நிலையில் சித்து இச்சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தான் புதிய கட்சியை துவங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இச்செய்தியினை சித்துவின் மனைவி பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்தார்.
பர்கத் சிங் மற்றும் பெய்ன்ஸ் சகோதரர்களோடு இணைந்து சித்து இப்புதிய கட்சியை துவங்கியிருப்பதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ துவக்க விழா அடுத்த வாரம் நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Write comments