இந்து கடவுளை அவமதித்ததாக டோனி மீது தொடரப்பட்ட வழக்கில் கிரிமினல் நடவடிக்கைகளை ரத்துசெய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
2013-ம் ஆண்டு வெளியான ஒரு வர்த்தக மாத பத்திரிகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியை, இந்து கடவுளான விஷ்ணு போல சித்தரித்து படம் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த படத்தில் டோனிக்கு பல கைகள் இருப்பது போன்றும், ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபார பொருட்களை அவர் வைத்து இருப்பது போலவும் இருந்தது. அதில் ஒரு கையில் ஷூ ஒன்றும் இடம் பெற்று இருந்தது.
இந்த படம் இந்து மதத்தினரை புண்படுத்துவதாக இருக்கிறது என்றும் விளம்பரத்தில் தோன்றிய கேப்டன் டோனி மற்றும் அதனை வெளியிட்ட பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடகாவை சேர்ந்த சமூக சேவகர் ஜெயக்குமார் ரேமத், கர்நாடகாவில் உள்ள கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, டோனி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த போலீசாருக்கு அறிவுறுத்தியதுடன், கேப்டன் டோனி கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டார்.
தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டோனி சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கர்நாடக ஐகோர்ட்டு டோனி மீதான விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதனை அடுத்து கேப்டன் டோனி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நான் அந்த புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கவில்லை. அந்த புகைப்படம் வெளிவந்த பிறகு தான் எனக்கு தெரியும். இதில் எந்தவித கிரிமினல் நடவடிக்கையும் இல்லை. இந்த வழக்குக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக கோர்ட்டில் டோனிக்கு எதிராக நடத்த உத்தரவிடப்பட்ட கிரிமினல் விசாரணைக்கு தடை விதித்தது.
இதே வழக்கில் கடந்த ஜனவரில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை ஆந்திர மாநில கோர்ட்டு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இன்று, சுப்ரீம் கோர்ட்டு கடவுளை அவமதித்ததாக டோனி மீது தொடரப்பட்ட வழக்கில் கிரிமினல் நடவடிக்கைகளை ரத்துசெய்து உத்தரவிட்டது.

No comments:
Write comments