இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஆடுவதற்காக இங்கிலாந்து அணி வந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் முடிந்தபிறகு வங்கதேசம் சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, இந்தியா, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வரிசையாக வங்கதேசத்துக்கு சென்று ஒருநாள் தொடரை இழந்து வந்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தின் இந்த சுற்றுப்பயணம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் தட்டுத்தடுமாறி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று தாக்காவில் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 238 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மஹமதுல்லா 75 ரன்களை குவித்தார், கடைசி ஓவர்களில் வங்கதேச அணியின் கேப்டன் மோர்தாசா 29 பந்தில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்ஸர் உட்பட 44 ரன்களை அதிரடியாகச் சேர்த்தார். இங்கிலாந்து அணி 239 ரன்களை எடுத்தால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்துடன் களம் இறங்கியது.
சுமாரான இலக்கு என்பதால் வங்கதேசம் வெற்றிபெறுமா என்ற சந்தேகம் உள்ளூர் ரசிகர்களுக்கே இருந்தது. முதல் மூன்று ஓவர்களில் 11 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. அதன் பின்னர் மோர்தாசா விக்கெட் வேட்டையை ஆரம்பிக்க 10 ஓவரில் 31 ரன்களுக்கே நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இங்கிலாந்து அணி. பேர்ஸ்டோ, பட்லர் இருவரும் சேர்த்து அதன் பின்னர் பொறுமையாக ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது.பேர்ஸ்டோ 35 ரன்னிலும், அடுத்து வந்த மொயின் அலி 4 ரன்னிலும் பெவிலியன் திரும்பினார்கள்.
அடுத்த ஓவரிலியேயே டஸ்கின் அகமது பந்துவீச்சில் பட்லர் அவுட்டானார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை, இதையடுத்து மூன்றாவது அம்பயரை வங்கதேச கேப்டன் மோர்தசா நாட உடனடியாக எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. அப்போது இங்கிலாந்து கேப்டன் பட்லரை கடுப்பேற்றும் வகையில் கொண்டாடினர் வங்கதேச வீரர்கள். குறிப்பாக மஹமதுல்லா, பட்லர் முன் சென்று முஷ்டி முறுக்கி பழித்தார். இதனால் ஆத்திரமடைந்த பட்லர் மஹமதுல்லாவுடன் சண்டை போட விரைந்தார். ஆனால் களத்தில் இருந்த அம்பயர் சமாதானப்படுத்தி பட்லரை அனுப்பி வைத்தார்.
பட்லர் சென்ற பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கடைசி விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த ஜேக் பால் மற்றும் அடில் ரஷிட் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். 44 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணியை மோர்தசா பிரித்தார். 34 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் சமன் செய்தது வங்கதேசம். பேட்டிங்கில் 44 ரன்கள், பவுலிங்கில் நான்கு விக்கெட்டுகள் எடுத்து அசத்திய மோர்தசா ஆட்டநாயகன் விருதை வென்றார். வங்கதேச வீரர்களின் மோசமான கொண்டாட்ட முறை குறித்து அதிருப்தி தெரிவித்தார் இங்கிலாந்து கேப்டன் பட்லர்.
வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் மற்ற நாடுகளின் வீரர்களை தொடர்ந்து கேலி செய்யும் வண்ணம் வங்கதேச ரசிகர்களும், வங்கதேச வீரர்களும் செயல்பட்டு வருகின்றனர். இது அந்த அணி மீது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் கோபம் கிளப்பியிருக்கிறது. வங்கதேசம் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி போட்டிகளை ஜெயிப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமாக இருந்தாலும், இது போன்ற செயல்கள் தொடர்ந்து அந்த அணி மீது உலக அரங்கில் தவறான பார்வையை விதைக்கிறது. வங்கதேசம் அதனை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
செய்தி :: சாஹிப்...



No comments:
Write comments