முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவருமான மார்கண்டேய கட்ஜு முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கட்ஜு, வழக்கம்போல் தன்னுடைய தனித்துவமான தோனியில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதாவது, “ஜெயலலிதா எனும் பெண் சிங்கத்திற்கு எதிராகத் திரளும் ‘லங்கூர்’ வகை குரங்குகள் போல் எதிரிகள் உள்ளனர்” என மறைமுகமாக யாரையோ சாடியிருக்கிறார். அவர், யாரை அடிக்கடி கடுமையாக விமர்சிப்பார், இப்போது யாரை குறிப்பிட்டிருக்கிறார் என்று நாம் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர் வாழ்த்துச் செய்தியில், ‘தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குணமடைந்து தனது அன்றாட பணிகளுக்குத் திரும்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல சுவாரஸ்யமான தனது மலரும் நினைவுகளை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். “தான் இளைஞனாக இருந்தபோது, ஜெயலலிதா மிக இளம்பெண்ணாக இருந்தார். அவர் மிகவும் கவர்ந்திழுக்கக்கூடிய வகையில் இருந்ததால் அவர்மீது பெரும் ஈர்ப்பு இருந்தது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அது ஒருதலைக் காதலாகும். இன்றும் அவர் கவரக்கூடிய சக்தியுடன் உள்ளார். அவர்மீதான ஈர்ப்பு இன்றும் உள்ளது. அவர் விரைவில் குணமடைய மீண்டும் வாழ்த்துகிறேன்” என மார்க்ண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றபின் பல விஷயங்கள் பற்றி எழுதும் கட்ஜூ தன் பண்பாட்டு, அரசியல் கருத்துகளுக்கு உவப்பில்லாத சகல விஷயங்களையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார். சமீபத்தில் பிஹாரிகள் பற்றி அவர் அடித்த கமெண்டுகள் கடும் சர்ச்சைகளைக் கிளப்பியநிலையில், இப்போது ஜெயலலிதா பற்றி உருகிப் பேசியிருக்கிறார். உடல்நலம் குன்றிய ஒருவருக்கு ஆறுதலளிக்கும் விதமாகப் பேசுவது வேறு, ஆனால் ஜெயலலிதா இன்னும் முதல்வர் எனும்நிலையில் அவரை தனிப்பட்ட முறையிலும் புகழ்ந்து பேசுவது வேறு. ஒருவேளை, சொத்துக்குவிப்பு வழக்கு கட்ஜுவின் பெஞ்சிடம் சென்றிருந்தால் தீர்ப்பு எப்படி இருந்திருக்கும்?

No comments:
Write comments