அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் வரலாற்று சிறப்புமிக்க பாரீஸ் பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்தை கைவிடுவேன் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்காவின் பொருளாதாரத்தையும், மின் கட்டணத்தையும் உயர்த்துவதாக இந்த ஒப்பந்தம் உள்ளது எனவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிரம்ப், "நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா முழுவதும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். மேலும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மின் விநியோகம் வழங்குவேன்.
சுற்றுச்சூழலில் அதிக ஈடுபாடு கொண்டவன் நான். நீங்கள் நம்ப மாட்டீர்கள். சுற்றுச்சூழல் சார்ந்து நிறைய விருதுகள் எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. நான் ஏன் பாரீஸ் பருவ நிலை மாற்றம் ஒப்பந்தத்தை எதிர்க்கிறேன் என்றால் அந்த ஒப்பந்தம் ஹிலாரியால் கொண்டு வரப்பட்டது. பாரீஸ் ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்படும். எனவே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பாரீஸ் ஒப்பந்தத்தைக் கைவிடுவேன்.
அமெரிக்க மக்களுக்கு தேவை சுத்தமான காற்று, சுத்தமான நீர் மட்டுமே. நாம் உலகம் முழுவதும் வாணிபம் செய்யப் போகிறோம். நமது அதிபர் ஒபாமா செய்து கொண்டிருப்பது போல் பைத்தியக்காரத் தனமான ஒப்பந்தங்களை செய்யப் போவதில்லை" என்று கூறினார்.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் தம்மிடம் தவறாக நடந்து கொண்டார் என ஜெசிகா லிட் (74), ரேச்சல் குர்க்ஸ் என்ற இரு பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். முன்னதாக 2005 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிரம்ப் பேசிய சர்ச்சை வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments