மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனும், பா.ஜ.கவின் எம்.பியுமான, வருண்காந்தி, சூழ்ச்சி வலையில் சிக்கியதாகவும், அது, வெளியில் தெரியாமல் இருக்க, இராணுவ ஆயுதங்கள் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த ரகசியங்களை கசியச் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதனால், அவரை கைகழுவ, பா.ஜ.க மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உ.பி மாநிலம் சுல்தான்பூர் தொகுதியிலிருந்து, பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு, எம்.பி. ஆனவர், வருண்காந்தி. இவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரன். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகாவின் மகன். முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ ஆலோசனைக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.
வருணுக்கு நெருக்கமான, அபிஷேக் வர்மா, ஆயுதங்கள் விற்கும் டீலராக உள்ளார். அபிஷேக் வர்மா, 2005ல், கடற்படை தொடர் பான ரகசியங்களை வெளியிட்டது குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அதுதொடர்பாக, அமெரிக்காவை சேர்ந்த, ஊழல் அம்பலப்படுத்தும் ஆர்வலர் எட்மாண்ட்ஸ் ஆலன், சி.பி.ஐ.,க்கு பல ஆவணங்களையும், 'சிடி'க்களில் புகைப்படங்களையும், பல ஆண்டுகளாக அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், விபச்சாரம் செய்யும் பெண்களுடன், வருண் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் உள்ள, 'சிடி' மற்றும் கடிதத்தை, பிரதமர் அலுவலகத்துக்கு, எட்மாண்ட்ஸ் ஆலன், கடந்த மாதம் அனுப்பி வைத்திருந்தார்.
அந்த புகைப்படங்களை காட்டி, வருணிடம் இராணுவ ஆயுதங்கள் குறித்த ரகசியங்களை, அபிஷேக் கறந்ததாக கடிதத்தில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை, ஸ்வராஜ் அபியான் அமைப்பு தலைவர்கள் யோகேந்திர யாதவ், பிரஷாந்த் பூஷண் ஆகியோர், சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கடிதத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை கடுமையாக மறுத்துள்ள வருண், ஸ்வராஜ் அபியான் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப் போவதாக எச்சரித்திருந்தார். அடுத்தாண்டு துவக்கத்தில், உ.பி.,யில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும்படி, வருண் நச்சரித்து வந்தார்.
இந்நிலையில், வருண் தொடர்பாக வெளியான, 'சிடி' பா.ஜ.க வட்டாரத்தில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பா.ஜ.விலிருந்து, வருண் கழற்றி விடப்படுவார் எனத் தகவல்கள் கூறுகின்றன.மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளில், பா.ஜ.க மேலிடம் எவ்விதத்திலும் குறுக்கிடாது என்றும்,பா.ஜ.க வட்டாரங்கள் கூறுகின்றன.
பா.ஜ.க - எம்.பி வருண்காந்தி, அந்த கட்சியில் எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதால், மூத்த தலைவர்களின் அதிருப்தியை சம்பாதித்தார்.உ.பி மாநிலம், அலகாபாத்தில், ஜூனில், பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தபோது, நகரின் சாலைகளில், வருணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன; இது, கட்சி தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
உ.பி மாநிலத்தின் பல பகுதிகளில், தன் ஆதரவாளர்களை அழைத்து, வருண், தனிக்கூட்டம் நடத்தியது, பெரும்சலசலப்பை ஏற்படுத்தியது. வருணின் ஒழுங்கீனம் பற்றி, பிரதமர் நரேந்திர மோடி யிடம், பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா புகார் கூறினார். வருணின் நடவடிக்கைகள் குறித்து, பா.ஜ.கவை சேர்ந்த மேலும் பல தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Write comments