பிரபல சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக் நடத்திவந்த அறகட்டளை நிறுவனத்திற்கு பா.ஜ.க அரசு 5 ஆண்டுகால தடைவிதித்துள்ளது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச்சேர்ந்த பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் மஹாராஷ்டிரா அரசு பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வந்தது. இதன் இறுதி கட்டமாக ஜாகிர் நாயக் நடத்திவந்த "இஸ்லாமிக் ரிசேர்ச் ஃபவுண்டேஷன்" என்ற அறகட்டளை சட்டவிரோதமாக வெளி நாடுகளிலிருந்து பணம் பெருதல், தீவிரவாதத்திற்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல் என்ற காரணங்களை முன்வைத்து மத்திய அரசு அவ்வரக்கட்டளை 5 ஆண்டு கால தடை விதித்துள்ளது.
இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தலைவர் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, " இந்திய அரசியலமைப்புச் சாசனம் உறுதி அளித்துள்ள மதச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் இது. சிறுபான்மையினரின் சமூக உரிமைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு தான் இந்த தடை. அரசியலமைப்புச் சாசனம் வழங்கியுள்ள மதத்தை பிரச்சாரம் செய்யும் உரிமைக்கு இடையூறு விளைவிப்பது தான் இந்த நடவடிக்கையின் நோக்கம்.
மேலும் இந்த தடைக்கு கொடூர சட்டமான யு.ஏ.பி.ஏ. பயன்படுத்தப்பட்டிருப்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. பழங்குடியினர், தலித்கள் மற்றும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த தனிநபர்கள், அமைப்புகள் மீது கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே இந்த சட்டம் அதிக அளவில் பாய்ந்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த யு.ஏ.பி.ஏ சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படும் நபர்களுக்கு எதிராக, உண்மையான ஆதாரங்களை திரட்ட முடியாமல் திணறும் விசாரணை அமைப்பின் அதிகாரிகள், இறுதியில் இந்த சட்டம் அளித்துள்ள சலுகைகளை பயன்படுத்தி தப்பி விடுகின்றனர். யு.ஏ.பி.ஏ போன்ற சட்டங்களுக்கு ஜனநாயகத்தில் இடம் இல்லை.
இதுபோன்ற சட்டங்கள் அரசியல் அழுத்தம் காரணமாக எப்போதும் காவல்துறையினரால் தவறாகவே பயன்படுத்தப்படுகின்றன. ஜாகிர் நாயக் அமைப்பின் மீதான தடையை ரத்து செய்வதுடன், அமைதியான முறையில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சிறுபான்மை அமைப்புகளை குறிவைப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது. யுஏபிஏ எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments