மோடி அரசின் சட்டவிரோதமான இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தாவிட்டால் இந்துத்துவவாதிகள் இந்த நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையை ஒழித்து சர்வாதிகார ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என சட்டவிரோதமான முறையில் அறிவிப்புச்செய்து மோடி அரசு இந்தியாவில் ஒரு ‘பொருளாதார அவசர நிலை’யைப் பிறப்பித்திருக்கிறது. மோடி அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கையால் ஏழை-எளிய மக்கள் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். உழைத்து சம்பாதித்த தமது சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் 80-க்கும் மேற்பட்ட ஏழை பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அமைப்புசாரா தொழில் முடங்கிவிட்டது. அதை நம்பியுள்ள கோடிக்கணக்கான மக்கள் சாப்பிட உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். விவசாயமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதியாக வீழ்ச்சியடையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வேண்டுமானால் ஒன்று, சட்டம் கொண்டுவர வேண்டும் அல்லது அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு தொலைக்காட்சி உரையின் மூலம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க பிரதமர் மோடிக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை. அவர் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த பிரதமர்தானே தவிர, ராணுவ சர்வாதிகாரி இல்லை. இது அப்பட்டமாக அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் என்று ஆரம்பம் முதலே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறி வருகிறது. உச்சநீதிமன்றமும் மோடியின் அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா என ஆய்வு செய்வோம் என அறிவித்திருக்கிறது.
மோடி அரசின் சட்டவிரோதமான இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தாவிட்டால் இந்துத்துவவாதிகள் இந்த நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையை ஒழித்து சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவந்து விடுவார்கள். அதற்கு ஜனநாயக சக்திகள் இடம் தரக்கூடாது. இதை உணர்ந்துதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் நவம்பர் 28ஆம் நாளை ‘தேசிய எதிர்ப்பு நாளாக’ அறிவித்திருக்கின்றன. அதை ஆதரித்து அந்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும். எனவே, அந்தப் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments