தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்ததாலும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாடகம் வஞ்சித்ததாலும் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துவருகின்றன.
சம்பா சாகுபடிப் பயிர்கள் காய்ந்து கருகியதால், டெல்டா பகுதியைச் சேர்ந்த ஏழு விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், மஞ்சள் விளையும் கொங்கு மண்ணிலும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி பேரிடியாக உள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள கரட்டடிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம், மூன்றரை ஏக்கர் நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்திருந்தார். தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி கருகியதைக் கண்ட அவர் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டார். ஈரோடு விவசாயி இராமலிங்கம் உள்ளிட்ட தற்கொலை செய்துகொண்ட 8 விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா 25 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்க நம்பிக்கையூட்டும்விதமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
தமிழக அரசு தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை எந்தவித நிபந்தனையுமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.
காவிரி பாசன மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் வாழ்நிலையை கருத்தில்கொண்டு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Write comments