எந்த டி.வி சேனைலை மாற்றினாலும், எந்த நாளிதழ்களை புரட்டினாலும் இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரே வார்த்தை "ஜல்லிக்கட்டு". தமிழர்களுக்கு மட்டுமே பரிட்சையமான ஜல்லிக்கட்டு இன்று இந்தியாவையும் தாண்டி உலக மக்களால் ஜல்லிக்கட்டு பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான் அது தமிழர்களின் ஒட்டுமொத்த போராட்டத்தினால்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கடந்த 3 வருடங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை இம்முறை தமிழர்கள் பொறுத்துக்கொள்வதாய் இல்லை. மாபெரும் புரட்சி வெடித்தது என்றே சொல்ல வேண்டும். லட்சக்கணக்கான தமிழர்கள் ஜாதி மத பேதமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் குவியத்துவங்கினர். கட்சி மாநாடுகளோ அல்லது ஏதாவது விழாக்காலங்களிலோ கொஞ்சம் அதிகமாகவே மக்கள் எண்ணிக்கை கூடிவிட்டால் ஏதாவது பிரச்சனை ஏற்படும். ஆனால் ஜல்லிக்கட்டிற்காக கூடிய இந்த மிகப்பெரும் கூட்டங்களில் ஒரு சிறு அசம்பாவித சம்பவங்கள் கூட நிகழவில்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
பல்வேறு ஜாதியினர், பல்வேறு மதத்தினர் கூடி இருந்தாலும், தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்தை முன்வைத்தே மக்கள் குவிந்தனர். இதில் மிகவும் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில் வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களுக்கு புனித நாள். மேலும் இஸ்லாமியர்கள் ஒவ்வொரு நாளும் 5 வேலை தொழுகைகளை நிறைவேற்றுபவர்கள். கடந்த வெள்ளிக்கிழமையும் மற்ற நாட்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் தங்களது தொழுகைகளை நிறைவேற்றினர். இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவெனில் நேற்றை தினம் பாளை வ.ஊ.சி மைதானத்தில் நல்ல மழை பெய்யத்துவங்கியது. இஸ்லாமியர்கள் தொழுவதற்காக ஒன்று கூடிய போது அங்கிருந்த இந்து சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் பாய்! நாங்கள் தார்பாய்களை பிடித்துக்கொள்கிறோம் நீங்கள் அல்லாவை வணங்குங்கள் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள் தங்களது தொழுகையை முழுவதுமாக நிறைவேற்றும் வரை அவர்களுக்காக தார்பாய்களை ஏந்தி நின்றனர்.
இச்சம்பவம் உணர்ச்சி ததும்பக்கூடியதாக அமைந்தது. தமிழகத்தில் மத மோதல்களுக்கு இடமே இல்லை என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்தது. தமிழன்டா...!


No comments:
Write comments