Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 17, 2017

வாழ்வை வாசித்து கழிப்போமா...?

Chennai book fair

சென்ற ஆண்டு ஜனவரியில் (2016) மழை வெள்ளத்தால் சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப் பட்டது. பின்னர் 2016 மே மற்றும் ஜூனில் நடந்த கண்காட்சிக்கு குடும்பச் சூழலால் கலந்துகொள்ள இயலாமற் போய்விட்டது. இடைப்பட்ட காலத்தில் பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவற்றிடமிருந்து நேரடியாக நூல்களை வாங்க முடிந்தது.

தற்போது நடந்துகொண்டுள்ள புத்தகக் கண்காட்சிக்கு எப்படியும் சென்று தீருவது என்கிற முடிவோடு, தோழர் செ.மணிமாறன் அவர்களுடன் 08.01.2017 ஞாயிறு ஒருநாள் முழுக்கச் சுற்றிவந்து சில நூல்களை இருவரும் வாங்கி வந்தோம். தமிழகத்தின் இந்த பிருமாண்டமான கண்காட்சிக்கு ஒருநாள் போதுமா? என்ன செய்வது? வாழ்வுச்சூழல், குடும்பச் சிறை ஒருநாள் வழங்குவதே அரிதாகிவிட்டது.

கழிவறை உள்ளிட்ட ஆண்டுதோறும் தொடரும் துயர்கள் இன்றும் தொடர்கின்றன. நிரந்தரக் காட்சியிடமே இதற்குத் தீர்வாக அமையும். அவ்விடத்தில் புத்தகங்கள், கைவினைப் பொருள்கள், ஓவியங்கள், சிற்பங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் எனப் பல கண்காட்சிகளை நடத்த முடியும். இலக்கிய அரங்குகளை அங்கு நடத்தவும் வசதி கிடைக்கும். இது முடியாத காரியம் ஒன்றல்ல. ஆனால் அதற்கான உறுதிப்பாடு நமது ஆட்சியாளர்களிடம் இல்லை.

அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் புத்தகக் கண்காட்சி குறித்து தகவல்களை தினசரி அளிக்கின்றன. இது ஒருவகையில் விளம்பரம் போலவும் வாசகர்களுக்கு பயனுள்ளதாகவும், புதியவர்களை உள்ளேக் கொண்டுவரவும் உதவி புரியக்கூடும். வேந்தர் தொலைக்காட்சிக்காக புலம் அரங்கில் அப்பதிப்பகம் சார்பாக சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். அது வேந்தர் செய்திகளில் ஒளிபரப்பானது. புதுச்சேரி அரசு செய்வதைப் போன்று 5% கழிவு அரசு வழங்க முன்வராத நிலையில் இந்த ஊடகப் பரப்புரையை பாராட்டத்தான் வேண்டும்.

நூல்களைத் தேடிப்பிடித்து வாங்கவும் நண்பர்களைச் சந்திக்கவும் இந்தக் கண்காட்சி ஒரு நல்வாய்ப்பாக அமையும். தோழர்கள் ஓடை.பொ.துரையரசன், ஷோபாசக்தி, க. நாகராஜன், சுந்தரபுத்தன், பாரதிதம்பி, சிவகுமார் முத்தய்யா, சியாம் சுந்தர், தேவநேயன், இனியன், வசந்த் ராஜா, தம்பி போன்றவர்களை சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு இனிமையானது.

உடல் நலிவுற்றிருக்கும் நிலையிலும் தோழர் நெடுவாக்கோட்டை உ.ராஜேந்திரன் அவர்கள் இயல்வாகை வெளியிட்ட ஜே.சி. குமரப்பாவின் ‘நிலைத்த பொருளாதாரம்’ நூலைக் கேட்டிருந்தார். முதலில் அதைத்தான் வாங்கினேன். அ.கி. வேங்கடசுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு. அப்படியே எனக்கும் ஒரு பிரதி.

சிறிய பதிப்பகங்கள் வெளியிடப்படும் நூல்களை இங்கு வாங்க முடியாத அவலம் தொடர்கிறது. முன்பு தோழர் பொதியவெற்பனின் ‘சிலிக்குயில்’ போன்ற அரங்குகளில் இத்தகைய அரிய நூற்கள் கிடைக்கும். இன்றைய வணிகமயச் சூழலில் குப்பைகள் எல்லாக் கடைகளிலும் கிடைப்பதே வாடிக்கையாகி விட்டது.

கண்காட்சியின் இறுதிநாள் வரையில் புதிய நூல்கள் வந்துகொண்டிருப்பது வாடிக்கையான ஒன்று. அதுவும் ‘வர்தா’ புயலின் பாதிப்பால் திட்டமிட்டபடி நூற்களை உருவாக்கச் சற்றுக் காலதாமதம் ஆகக்கூடும். மூன்றாவது நாளே நாங்கள் சென்றபடியால் கடைசி நேரத்தில் வெளியாகும் புத்தகங்களை தவறவிட்டோம் என்றே சொல்லவேண்டும்.

வழக்கம் போல பாரது புத்தகாலயம் தோழர் சிராஜ், புலம் லோகநாதன் ஆகியோர் உதவியுடன் புத்தகங்களை வாங்குக் குவித்து அங்கேயே அட்டைப் பெட்டியில் அடைத்து பார்சல் மூலம் அனுப்பச் சொல்லிவிட்டு ஊருக்குக் கிளம்பினோம். புத்தகங்களை வாங்கும் தருணங்களும் அது மீண்டும் நம் கைகளில் தவழ்வதும் ஒரு குழந்தையைப் போல இருப்பது கொள்ளை அழகு. வேறு யாருடன் உரையாடுவது? இவைகளுடன் தான் நமது உரையாடல் தொடர்கிறது.

வாசிக்க வேண்டிய புத்தகங்களின் சுமை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே செல்கிறது. எல்லாவற்றையும் வாசித்துத் தொலைக்க வேண்டும். சாவதற்குள் வாசித்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது. வாழ்வை வாசித்துத்தான் கழிக்கவேண்டும். 

நன்றி: மு. சிவகுருநாதன்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic