சென்னை அம்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அசன் ஆரூண் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசன் ஆரூண் போட்டியிடுகிறார். இவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.எம்.ஆரூணின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது தந்தை மற்றும் உறவினர்கள் சிலருடன் தேர்தலுக்காக முகப்பேர் பகுதியில் உள்ள ஒலிம்பிக் காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். தினமும் காலை, மாலை பிரசாரத்துக்காக அசன் ஆரூண் இங்கிருந்துதான் செல்வார். இரவில் அங்கேயே தங்குவார்.
இந்நிலையில் நேற்று மாலை பிரச்சாரத்துக்காக அசன் ஆரூண், வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். அவருக்கு பின்னால் அவரது ஆதரவாளர்கள் 2 கார்களில் சென்றனர். மாலை 4 மணி அளவில் அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை 3-வது மெயின் ரோடு அத்திப்பட்டு ஜங்சன் அருகில், சிக்னலுக்காக அவர் சென்ற கார் நின்று கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் தாம்பரம்-மாதவரம் சாலை மேம்பாலத்தில் இருந்து மர்ம நபர்கள் சிலர் ஆசிட் நிரப்பிய முட்டை, கண்ணாடி பாட்டில்களை வேட்பாளர் அசன் ஆரூண் மீது வீசினர்.
அவை, அவர் அமர்ந்து இருந்த கார் கதவில் பட்டு தெறித்தது. அப்போது ‘குபீர்’ என புகை எழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
அசன் ஆரூண் மீது வீசப்பட்ட பாட்டில் உடைந்த சத்தம் கேட்டு அவருக்கு பின்னால் வந்த அவரது அதரவாளர்கள் காரை விட்டு இறங்கி ஓடிச்சென்று அசன் ஆரூணை பாதுகாப்பாக காரை விட்டு அழைத்துச் சென்றனர். காரின் இடது பக்க கதவு கண்ணாடி மூடப்பட்டு இருந்ததால் ஆசிட் அசன் அரூண் மேல் படவில்லை.
கதவு கண்ணாடியை திறந்து வைத்து இருந்தால் அவரின் உடல் முழுவதும் ஆசிட் பட்டு விபரீதம் ஏற்பட்டு இருக்கும். ஆனாலும் வீசப்பட்ட வேகத்தில் சிறிதளவு ஆசிட் காருக்குள் கசிந்து அசன் ஆரூண் மீது பட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன அவர் அதிர்ச்சியில் அலறினார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் ஆறுதல் கூறினர்.
சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் அசன் ஆரூணை ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அந்த பகுதியில் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அ.தி.மு.க.வுக்கும், போலீசுக்கும் எதிராக கோஷம் போட்டனர். அசன் ஆரூண் மீது திராவகம் வீசியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் துணை போலீஸ் கமிஷனர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடமும், அசன் ஆரூணின் தந்தை ஆரூணிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று 5.30 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
பின்னர் அசன் ஆரூணின் தந்தையும், முன்னாள் எம்.பி.யுமான ஆரூண் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது மகன் அசன் ஆரூண் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.க.வினர்தான் அவரை கொலை செய்யும் திட்டத்தோடு அவர் மீது ஆசிட் வீசி உள்ளனர். அவர் முகம் சிவந்து உள்ளது. அ.தி.மு.க.வுக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. முழுக்க முழுக்க இது அ.தி.மு.க. தரப்பினர் திட்டமிட்டு நடத்திய கொலை வெறித் தாக்குதல் என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவிக்க ஆரூண் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு நடந்த சம்பவம் பற்றியும், அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனரிடம் ஆரூண் புகார் செய்தார்.
புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார். இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments