தமிழக சட்டமன்றத்தேர்தலில் இம்முறை ஆட்சியைப்பிடிப்பது யார் என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும் என்றாலும் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னரும் பின்னரும் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் பத்திரிகைகள் வெளியிட்ட கருத்துக்கணிப்பை பார்க்கும்போதும் மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும் என்று தெரிகிறது.
கருத்துக்கணிப்பு வெளியிட்ட ஊடகங்களில் ஒன்றை தவிற மற்ற அனைத்தும் திமுகவே இம்முறை வெற்றி பெரும் என்று அறிவித்துள்ளது. அப்படியானால் இன்னமும் மக்களின் மனநிலை இவ்விரு கட்சிகளை ஆதரிப்பதைவிட்டும் மாறவில்லை என்றே தோன்றுகிறது. தேர்தலுக்கு முன்பு இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக உருவெடுத்த மக்கள் நலக்கூட்டணி மக்கள் மத்தியில் மிகப்பெரும் பேச்சாக ஆரம்பத்தில் அடிபட்டது.
திமுக அதிமுக அல்லாத ஒரு மாற்று சக்தி, 3வது அணியை உருவாக்குவோம் என்கிற ரீதியில் மதிமுக தலைவர் வைக்கோ இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும், தலித் சமூகத்தின் மாபெரும் சக்தியாக விளங்ககூடிய திருமாவளவனையும் ஒருங்கினைத்து மக்கள் நலக்கூட்டணியை துவக்கினார். ஆரம்பத்தி மக்கள் மத்தியில் இக்கூட்டணி பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், ஒட்டுமொத்தமாக விஜயகாந்தை நம்பி அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததும், மக்கள் நலக்கூட்டணி கேப்டன் நலக்கூட்டணியாக மாறிப்போனது. மக்கள் நலக்கூட்டணியின் செல்வாக்கு குறைந்து கொண்டே போன சமயத்தில் அதிமுகவிலும், திமுகவிலும் இடம்கிடைக்காத வாசன், பா.ஜ.கவோடு கூட்டணி வைக்கலாமா? என்னும் அளவிற்கு யோசித்துக்கொண்டிருக்கும்போது அவரையும் மக்கள் நலக்கூட்டணியில் இணைத்ததன் விளைவு எஞ்சியிருந்த மக்கள் செல்வாக்கையும் இந்த கூட்டணி இழந்தது. ஆகமொத்தம் திமுக, அதிமுகவால் கலட்டிவிடப்பட்ட கூட்டணி என்றாகிவிட்டது.
வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் மொத்தம் 11 தொகுதிகளில் வெல்வதே கடினம் என்று தெரிகிறது. மக்கள் இவர்களை அங்கீகரிக்கவில்லையா? அல்லது மக்கள் நம்பியமாதிரி இவர்கள் நடந்து கொள்ளவில்லையா? அல்லது மக்களின் மனம் இன்னமும் திமுக, அதிமுகவை விட்டு விலகவில்லையா? என்று தெரியவில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் வலுவான 3வது அணி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.
- புகழேந்தி

No comments:
Write comments