கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அனல் பறக்க நடந்து வந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (மே 16) தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. 6 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும், தொகுதிக்கு தொடர்பில்லாத பிறநபர்கள் அங்கியிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையம், பிரச்சாரம் முடிவடைந்தவுடன், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
அதோடு, இன்று மாலை, 6:00 மணியில் இருந்து, ஓட்டுப்பதிவு தினமான 16ம் தேதி மாலை 6:00 மணி வரை, தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளை, 'டிவி' மற்றும் சமூக வலைதளங்களில், வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்களின் அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்றும், அவர்களின் புகைப்படங்கள், சின்னங்கள் போன்றவற்றை காண்பிக்கக் கூடாது என்றும், மீறி ஒளிபரப்பினால், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில், 320 பெண்கள், இரண்டு திருநங்கையர் உட்பட மொத்தம் 3,776 பேர் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments