நடந்து முடிந்த 2016 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 104 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே தே.மு.தி.க., 'டிபாசிட்' பெற்றுள்ளது.
இதனால் கட்சியின் எதிர்காலம் குறித்து கட்சியின் மேல் மட்ட நிர்வாகிகள் முதல் கீழ் நிலை தொண்டர்கள் வரையில் பலரும் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். இதனால் தோல்வி குறித்து ஆய்வு செய்யும் பணியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இறங்கி உள்ளார்.
அதற்காக கட்சியின் மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் விஜயகாந்த் பேசி வருகிறார். அப்போது 'கட்சியில் நிறைய உள்ளடி வேலைகள் நடந்துள்ளது. அதற்கு மாவட்ட செயலர்கள்தான் காரணம்' என குற்றச்சாட்டுகளை விஜயகாந்த் அள்ளி வீசியதால் அங்கிருந்த நிர்வாகிகள் அனைவரும் விஜயகாந்த் மீது கோபம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையில் அடுத்த கட்டமாக கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை அழைத்து விஜயகாந்த் பேசியுள்ளார். அவர்களிடமும் அவர் கேள்வி மேல் கேள்வி கேட்க அவர்களும் விஜயகாந்த் மீது கடும் கோபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தல் தோல்விக்குப் பின் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பக்கம் போக நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தகவல் விஜயகாந்துக்குப் போனதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அதனால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவே கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேசியவர் பின்னர் வேட்பாளர்களையும் அழைத்து பேசினார்.
அப்போது ஒவ்வொருவரிடமும் விஜயகாந்த் நிறைய கேள்விகளை கேட்டு வெறுப்பேற்றுவது போல பேசியுள்ளார்.
* தோல்வி மன நிலையிலேயே நீங்கள் களத்தில் இருந்து பணியாற்றியது ஏன்?
* கட்சி தலைமை ஒரு முடிவெடுத்தால் அதை ஏற்க மறுப்பது போல நடப்பது சரியா?
* தேர்தலில் பணம் நிறைய விளையாடி உள்ளபோது, பணம் படைத்த நம் கட்சி வேட்பாளர்களும், பணத்தை செலவிட தயங்கியது ஏன்?
* சில இடங்களில் கட்சி வேட்பாளர்கள் தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களிடம் விலை போனது ஏன்?
* பணத்துக்கு விலை போனதன் விளைவாகவே பல இடங்களிலும் நம் வேட்பாளர்களால் 'டிபாசிட்' கூட பெற முடியாமல் போயிள்ளது.
* இப்போதும், அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டு தரப்பிலும் ஆட்களை இழுக்க பலமான முயற்சி நடக்கிறது. அதற்கு, நம்ம ஆட்களும் உதவி புரிகின்றனர். அவர்கள் பற்றி அத்தனை விவரங்களும் என்னிடம் உள்ளன.
* தி.மு.க., தரப்பில், முன்னாள் அமைச்சர் ஒருவரை எதிர்த்து நம் கட்சி சார்பில் போட்டியிடும் நபரை நம் கட்சி மாவட்ட செயலர் ஒருவர் 'ஆப்' செய்திருக்கிறார். அதே போல அந்த மாவட்ட செயலர் போட்டியிடும் தொகுதியில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதவி இருக்கிறார். இந்த உள்குத்தை எப்படி அனுமதிப்பது?
இப்படி பல கேள்விகளை விஜயகாந்த் கேட்க வேட்பாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்ததோடு அவர் மீது கோபமும் அடைந்துள்ளனர். கூட்டணியை சரியாக அமைக்காமல் கடைசி வரை சந்தேகத்துக்குரிய வகையில் நடந்து கொண்ட கட்சித் தலைமை எங்களை கேள்வி கேட்பது சரியில்லை என வேட்பாளர்கள் பலரும் குமுறியபடியே சென்றனர் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments