ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் மாதத்தில் பலஸ்தீனியர்கள் இஸ்ரேலில் உள்ள தங்களது சொந்தக்காரர்களை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அது போலவே இவ்வருடமும் இஸ்ரேல் செல்ல விண்ணப்பித்த 83,000 பலஸ்தீனியர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் நேற்றைய தினம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
நேற்றைய தினம் டெல்அவிவில் மக்கள் கூடுகின்ற இடத்தில் துப்பாக்கிய ஏந்திய இரண்டு பேர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அவ்விருவரும் பலஸ்தீனியர்கள் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இஸ்ரேல் வர அனுமதியளிக்கப்பட்ட அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக ஹமாஸ் ஆதிக்கத்தில் இருக்கும் காஜா பகுதியின் பலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்குள் செல்லவோ அந்நாட்டு விமான நிலையத்தையோ உபயோகப்படுத்த முடியாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதேசமயம் இஸ்ரேலில் அதிகாரப்பூர்வமாக பணிபுரியும் பலஸ்தீனியர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறும்போது "பொதுமக்கள் மற்றும் அப்பாவிகள் மீது இத்தகைய கொடூர தாக்குதல் நடத்தப்படுவதை ஒரு போதும் சகித்துக்கொள்ள முடியாது. இஸ்ரேலிய அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவையும் தெரிவித்துள்ளோம் என்று கூறினார்.

No comments:
Write comments