என்னதான் உருகி உருகி காதலித்தாலும், விதி நினைப்பதுதான் இறுதி முடிவு என்பதை மிக அழகாக நம் மக்களுக்கு உணர்த்திய எதார்த்தமான படம், 2011ம் ஆண்டு வெளியான ‘எங்கேயும் எப்போதும்’. இந்தப் படத்தில் காதல் ஜோடியாக நடித்த ஜெய் மற்றும் அஞ்சலி, தங்களின் இயல்பான நடிப்பால் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டனர். அதுமட்டுமின்றி, அவர்களின் ஜோடிப் பொருத்தம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற, தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவே ஜெய் – அஞ்சலி ஜோடி கருதப்பட்டனர். மீண்டும் அவர்களைத் திரையில் காண முடியாதா என்று எண்ணிய ரசிகர்களுக்கு, சுமார் ஐந்து வருடம் கழித்து பலன் கிடைத்துள்ளது. புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கி வரும் காதல் கலந்த திகில் படத்தில் ஜெய் – அஞ்சலி மறுபடியும் ஜோடி சேர்ந்துள்ளனர். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர். சரவணன், கலை இயக்குனராக சக்தி வெங்கட்ராஜ், படத்தொகுப்பாளராக ரூபன், ஸ்டன்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக என்.ஜே. சத்யா மற்றும் நடன இயக்குனராக ஷெரிப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
“திறமையான நடிகையாக அஞ்சலி மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அஞ்சலியின் நடிப்பாற்றலுக்கு எல்லை என்பதே கிடையாது. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், அதைத் திரையில் அப்படியே பிரதிபலிக்கும் ஆற்றலைக் கொண்டவர் அஞ்சலி. எங்கள் படத்தின் தனித்துவமான கதாப்பாத்திரத்திற்கு அஞ்சலிதான் பொருந்துவார் என்று சொன்ன அடுத்த கணமே, எங்கள் படக்குழுவினர் அனைவரும் அதை வரவேற்றனர். ஜெய் – அஞ்சலி கூட்டணி ஏற்படுத்திய இதே உற்சாகம் படம் முழுக்க நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்கிறார் இயக்குனர் சினிஷ்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments