சண்டிகர் - ஹரியாணாவில் ஜாட் சமூகம் தங்களுக்கு அரசுத்துறைகளில் இடஒதுக்கீடு வேண்டும் எனக்கோரி சமீபகாலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த போராட்டம் டெல்லி, உத்திரபிரதேசம் என அண்டை மாநிலங்களுக்கும் பரவி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹரியாணாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்து வரும் ஜாட் சமூகம் தங்களுக்கு உரிய இடஒதுக்கீடு வேண்டும் என நெடுங்காலமாகவே அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது வீதிகளில் இறங்கி அம்மக்கள் போராட துவங்கியுள்ளனர். சமீப நாட்களாக அம்மக்களின் போராட்டம் ஹரியாணாவில் வீரியம் அடைந்து வருகிறது. மேலும் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக அதன் தலைவர்கள் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனையெடுத்து ஹரியானா டெல்லி எல்லையை இணைக்கும் பாணிபட் கோஹானா தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் காவல்துறை அதிகாரிகளுடன் துணை இராணவப்படை வீரர்கள் என மொத்தம் 6000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. ஜாட் சமூகம் மீண்டும் போராட்டத்தில் இறங்குவதற்கு முக்கிய காரணம் மாநில மற்றும் மத்திய அரசுகளே என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அண்டை மாநிலமான டெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களிலும் ஜாட் சமூகத்தினர் தங்களது போராட்டத்தை இன்று துவக்குகின்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் ஜூன் 12 ஆம் தேதி மேலும் 10 மாநிலங்களிலும் தங்களது போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு 30 பேர் கொல்லப்பட்டனர். ஹரியானா அரசு இம்மக்களின் கோரிக்கையை ஏற்று இடஒதுக்கீடு வழங்க சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அம்மாநில உயர்நீதிமன்றம் இதற்கு தடைவிதித்தால் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments