பொதுமக்களின் பாதுகாப்பில் தமிழக அரசு செயல் இழந்து விட்டதாக, தொல்.திருமாவளவன் கூறினார்.
அஞ்சலி:
மதுரை மாவட்டம் மேலவளவு அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட ‘விடுதலைக் களம்‘ நினைவு மண்டபத்தில் அந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக அவர் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்றவற்றில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக சென்னையில் சுவாதி என்ற பெண் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது, மக்களின் பாதுகாப்பில் தமிழக அரசு செயல் இழந்து இருப்பதை உணர்த்துகிறது.
தமிழகத்தில் கூலிப்படை மூலம் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் கூலிப்படைகளின் செயல்பாடு தமிழகத்தில் இல்லை என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. கொலைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் 2–ந்தேதி (நாளை) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கூலிப்படை விவகாரத்தில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். தனிச் சட்டம் இயற்ற வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டதை கூட்ட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல்:
உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு சாதகமான சூழலை ஆளும் கட்சியினர் ஏற்படுத்தி வருகின்றனர். மாநகராட்சி மேயரை, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கலாம் என மாற்றியிருப்பது தேர்தலில் அவர்களது தோல்வி பயத்தை காட்டுகிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. அதில் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி மேயர் பதவியை ஆதிதிராவிடருக்கு ஒதுக்க வேண்டும்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவிய தருண் விஜய் எம்.பி.யின் முயற்சிக்கு வாழ்த்து, பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விழாவில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்ளாமல் இருந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கும் விதமாக உள்ளது என அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் காரில் புறப்பட்டு மேலவளவு சென்றார். அங்கு தொண்டர்களுடன் நினைவு மண்டபத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதாரி ஏற்பாட்டின் பேரில் அந்த பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments