தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. தமிழக அரசின் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். தமிழகத்தில் கடந்த மே 16ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்றனர். புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஜூன் 16ம் தேதி நடந்தது. கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். பின்னர், கவர்னர் உரை மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்று சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. சபாநாயகர் தனபால், திருக்குறள் வாசித்து முடித்ததும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2016-2017ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அத்துடன் பேரவை ஒத்திவைக்கப்படும். அதன்பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையில் பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இதில், பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது மற்றும் துறை வாரியான மானியக்கோரிக்கைகள் மீது எத்தனை நாள் விவாதம் நடத்துவது என்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அநேகமாக, இந்த தொடர் சுமார் ஒரு மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாது என தெரிகிறது. வருகிற அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகளை வெளியிட அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது. பால் விலையை குறைப்பது, மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவது, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது போன்றவை இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் பெரும்பாலும் பட்ஜெட்டில் இடம் பெறாது என்றும், 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதாவே வௌியிடுவார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பளக் கமிஷன் ஊதியம் அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் 7வது சம்பளக் கமிஷன் ஊதியம் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அது குறித்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிட வாய்ப்புள்ளது. நாளை முதல் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும், அடுத்த இடத்தில் உள்ள காங்கிரசும் பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொடூர கொலைகள் மற்றும் கூலிப்படையினரின் அட்டகாசம் உள்பட பல பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளன. அதே போல், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தும் என கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பல லட்சம் மக்களுக்கு இன்னும் நிவாரண உதவி கிடைக்காதது உள்ளிட்ட விஷயங்களும் எழுப்பப்படும். இதனால், இந்த கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments