இந்தியாவில் குஜராத், உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கபப்ட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. குஜராத்தில் உனா மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சம்பவத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதை அடுத்து அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது. குஜராத் மாநில அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஒரு தலித் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
எதிர்கட்சிகள் பெரும்பாலும் இப்பிரச்சனையில் மத்திய அரசை குற்றஞ்சாட்டி வந்தனர். பிரதமர் மோடியும் இவ்விவகாரத்தில் எந்த கண்டனமும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் தெலுங்கானாவைல் பா.ஜ.க கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோடி 'பசு காவலர்கள்' என்று தங்களை கூறுபவர்களில் 80% பேர் சமூக விரோதிகள் என்றும் அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என்று பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சுக்கு பல இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மோடிக்கு புத்தி கெட்டுவிட்டது எனக்கூறி அவருக்காக சிறப்பு பூஜையை மீராட்டில் இந்து மகா சபை சார்பாக நடத்தப்பட்டது. இது தொடர்பாக அகில பாரதீய ஹிந்து மஹா சபையின் தலைவர் சந்திரபிரகாஷ் கெளசிக் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது ' நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் தகுதியை இழந்துவிட்டார். கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியை கண்டு வாஜ்பாய் எப்படி வீட்டிற்கு அனுப்பப்பட்டாரோ அதே போன்று மோடியும் அனுப்பப்படுவார். நரேந்திர மோடிக்கு நல்ல புத்தி ஏற்பட நாங்கள் சிறப்பு பூஜைகளை செய்து வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.
மோடி கூறிய விமர்சனத்திற்கு எதிராக சட்டரீதியாக அவர் மீது வழக்கு தொடுக்க இந்து மகா சபை தனது சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து நோட்டீஸ் அனுப்ப இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுவை பாதுகாப்பதற்காக தங்களது வாழ்க்கையை தியாகம் செய்தவர்களை பார்த்து மோடி இவ்வாறு கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம் என சுவாமி சக்கிரபானி தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments