ஒடிசா மாநிலத்தின், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழங்குடி கிராமம்தான் நாகடா என்னும் பகுதி. அரசாங்கத்தின் பார்வைக்குள் படாமல் இந்தப் பழங்குடி கிராமத்தில் கடந்த கோடையின்போது, 19க்கும் மேற்பட்ட குழந்தைகள் விசித்திரமான அம்மை நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட, ஐந்து நாளுக்கு ஒரு குழந்தை என்று கடந்த மூன்று மாதத்துக்குள் பத்தொன்பது குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அதில், பதன் என்பவரின் ஏழு மாதக் குழந்தையும் அடக்கம். கடந்த ஜுன் மாதம் அவரது குழந்தைக்கு திடீரென காய்ச்சல் வந்ததாகவும், என்ன செய்வதென்று புரியாமல் அவரது சிறிய குடிசைக்குள் வைத்து பார்த்துக்கொண்டதாகவும், திடீரென மர்மமான அம்மை நோய் தாக்கி, அக்குழந்தை ஒரே வாரத்தில் இறந்துபோனதாகவும் கண்ணீரோடு கூறுகிறார் அந்த ஏழை விவசாயி.
ஜுவாங் என்றழைக்கப்படும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒடிஷாவின் நாகடாவில் வசித்து வருகின்றனர். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத இம்மக்கள், இதுபோன்ற சமயங்களில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவர்களுக்கு எந்தவிதமான மருத்துவ வசதிகளுமே கிடையாது. இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திக்கும்போது கேட்பாரின்றி கிடப்பதே வழக்கமாகியிருக்கிறது.இதேமாதிரி, ஒவ்வொரு வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் காய்ச்சல், குமிழ்வடிவிலான கொப்புளங்கள் என்ற அறிகுறிகள் தோன்றி பின், ஒவ்வொரு குழந்தைகளாக இறந்துவிடுவதாக குழந்தையைப் பறி கொடுத்த தாய் ஒருவர் கூறினார்.ஜெய்ப்பூர் மாவட்ட மருத்துவ தலைமை அதிகாரி திரு.பனின்ட்ர குமார் இதுகுறித்துப் பேசும்போது, ‘அந்தக் குழந்தைகள் இறந்ததற்கு ஊட்டச்சத்துக் குறைபாடே காரணம் என்றும் மேலும், தட்டம்மைக்கான அறிகுறிகள் தெரிவதால் இது மிகவும் ஆபத்துக்குரியது’ என்றும் கூறினார்.
ஜூலை இறுதியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பாக, நாகடா உட்பட ஏழு பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுக்கப்பட்ட 114 குழந்தைகளில் 52 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடோடு இருப்பது தெரியவந்தது. அதில், 27 குழந்தைகள் அதிதீவிரமான ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த மாதிரியான குழந்தைகள், சாதாரண குழந்தைகளைக் காட்டிலும் ஒன்பது மடங்கு பலவீனமாக இருக்கும் என்றும் கூறினர்.பிரதீன் பிரதன் என்ற மனித உரிமை ஆர்வலர் இதுகுறித்து கூறும்போது, ‘அரசாங்கத்தின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம். அவர்கள் அதிகாரிகளால் மறக்கப்பட்டுவிட்டனர்’ என்று கூறினார்.
நாகடா மூன்று குக்கிராமங்களின் தொகுப்பாகும். இங்கு அசாத்தியமான வளைவுகளுடனான காடுகளும், மலைகளும் உள்ளன. இங்கே எந்தவிதமான மின்சார வசதிகளோ , மருத்துவ வசதிகளோ கிடையாது. அரசாங்கம், இங்கு ஆரம்பப் பள்ளி வசதியும் தாய்சேய் நல மையமும் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதன் ஊழியர்கள் பல மாதங்களுக்கு ஒருமுறைதான் எட்டிப் பார்ப்பதாக இங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகள் இறப்புவிகிதத்தில், ஒடிஷா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அரசாங்கத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2014ஆம் ஆண்டில் 1000 குழந்தைகளில் 49 குழந்தைகள் என்ற விகிதத்தில் இறக்கிற குழந்தைகளின் எண்ணிக்கை அமைந்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அஸ்ஸாம் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதைவிட மோசம் என்கின்றனர்.இந்த எண்ணிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்தக் கோடையில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள், வெறும் நிதிப் பற்றாக்குறையால் மட்டும் நிகழ்ந்துவிடவில்லை என்றும் அதற்கு அரசாங்கத்தின் அலட்சியப் போக்கே காரணமாகும். அரசாங்கம் இப்போது அவர்களுக்கு பணம் மற்றும் பொருள் உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் விரைவிலே இன்னொரு பிரச்னையின்போது அவர்கள் இதேபோல பசியிலும் பிணியிலும் வாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
பாதிக்கப்பட்ட பதன், மேலுமொரு அதிர்ச்சியான தகவலைக் கூறினார். அதாவது, அங்கே ஒரு சிலருக்கு ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அட்டை ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதை வாங்குவதற்கு சுமார் 40 கி.மீ. தூரம் நடந்துசெல்ல வேண்டும். மீண்டும் வாங்கிய உணவு தானியங்களை தூக்கிக்கொண்டு மீண்டும் 40 கி.மீ. மலை ஏற வேண்டும். இதற்கு மலைத்துக்கொண்டு நாங்கள் யாரும் அதை வாங்கக்கூட செல்வதில்லை. வருடம் முழுக்க பசியோடுதானிருக்கிறோம். ஏதோ இந்தமுறை, இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அது செய்தியாகி, உணவு மற்றும் சில உதவிகள் கிடைத்தன என்று கவலை தோய்ந்த முகத்தோடு சொல்கிறார்.பிறகு பல்வேறு இன்னல்களுக்கும், விவாதங்களுக்கும் பிறகு அவர்களுக்கான மருத்துவம் மற்றும் இன்னபிற வசதிகளும் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு அவர்களுக்கு அது எளிதில் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தனது ஏழு மாதக் குழந்தையை இழந்த பதன், இதுபற்றிக் கூறும்போது, இனிமேல் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து மீண்டுவர முயற்சிப்போம் என்றார்.??
தமிழில்-பீட்டர் ரெமிஜியூஸ்

No comments:
Write comments