பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை அறுப்பதற்கு உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை கண்டித்து இஸ்லாமிய மத தலைவர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு அதன் இறைச்சிகளை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் இருந்துவருகிறது. இதற்காக கடந்த காலங்களில் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலிருந்து ஒட்டகங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு அறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஒட்டகம் அறுக்கும் அளவிற்கு தனியாக அறுவை கூடம் தமிழகத்தில் எங்கும் இல்லாததால் இதற்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்குகள் நல அமைப்பு சார்பில் பொதுநல மனு ஒன்று தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை வெட்ட தடை விதித்தது.
இதற்கு பல இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தங்களுடைய மத சுதந்திரத்தை பறிக்கும் செயல் என குற்றஞ்சாட்டி வருவதோடு இந்த தீர்ப்பை கண்டித்து பல போராட்டங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் மதுரை நெல்பேட்டையில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 35 மத தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments:
Write comments